வீட்டுக்கும் போகலை.. பிரசாரத்துக்கும் போகலை... ஹோட்டல்களிலேயே முடங்கிய அரசியல்வாதிகள்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது என்ற போதும் வேட்பாளர்களோ, கட்சியினரோ சுதந்திரமாக வீதிகளில் சென்று தொண்டை கிழிய கத்தி பிரசாரம் செய்ய முடியாமல் தீவிரவாதிகளுக்கு அஞ்சி பல மாதங்களாக ஹோட்டல்களிலேயே பதுங்கி உள்ளனர் அரசியல் பிரமுகர்கள்.
எந்த தேர்தல் களமாக இருந்தாலும் அதுவரை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு முழு நேர அரசியல் பணியாளர்களாக கட்சி பிரமுகர்கள் அலைவது நாம் பார்த்து வரும் காட்சிகள். வீதி வீதியாக வாக்கு கேட்கும் மைக் செட் வண்டிகள் அலறிக் கொண்டு ஓடும்.
ஆனால் பாரதத்தின் மணிமுடியான ஜம்மு காஷ்மீரில் நிலைமை தலைகீழ்.. வேட்பாளர்கள்தான் என்று இல்லை.. கட்சி பிரமுகர்கள் கூட வீதிகளில் நடமாட முடியாது.. அவ்வளவு பல கட்சி பிரமுகர்கள் சொந்த வீட்டுக்குக் கூட போகாமல் பாதுகாப்பு கருதி ஶ்ரீநகர் ஹோட்டல்களில் போலீஸ் கஸ்டடியில் இருப்பது போல் பதுங்கி இருக்கின்றனர்.
குறிப்பாக அனந்தநாக் லோக்சபா தொகுதியில்தான் நிலைமை படுமோசம். அனந்தநாக், புல்வாமா, சோபியான் மற்றும் குல்காம் பகுதிகளை உள்ளடக்கியது இந்த தொகுதி. தீவிரவாதிகள் கை ஓங்கி இருக்கும் இத்தொகுதியில் இதுவரை இல்லாத வகையில் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது.
மசூத் அசாரின் தடைக்கு ஒப்புக்கொண்ட சீனா.. மனமாற்றத்திற்கு மோடி காரணமா? பின்னணி என்ன?
அனந்தநாக்கில் கடந்த மாதம் 23-ந் தேதி, குல்காமில் ஏப்ரல் 29-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றன. புல்வாமா மற்றும் சோபியான் ஆகிய இடங்களில் வரும் 6-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலின் போது தீவிரவாதிகள் மிரட்டல் தொடங்கியது. இதனால் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களும் இப்போது ஹோட்டல்களில்தான் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த கவுன்சிலர்களுக்கு இதுவரை சம்பளமும் தரப்படவில்லை. அரசு அதிகாரிகளும் கூட இவர்களை எட்டிப்பார்ப்பதும் கிடையாது.
இவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல்களுக்கு போலீசார் மற்றும் மத்திய ஆயுதப் படை போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இவர்களைப் பார்க்க வரும் கட்சியினர் உட்பட அனைவரும் மிகக் கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
தேர்தல் பணிகள், வீடு வீடாக வாக்கு சேகரிப்பதற்கான வியூகங்கள் அனைத்துமே இந்த ஹோட்டல்களில்தான்... தங்களை எல்லோருமே கைவிட்டு விட்டார்களே என ஆதங்கப்படுகின்றனர் பதுங்கிக் கிடக்கும் அரசியல்வாதிகள்.