பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பை முறியடிக்க திட்டம்... டெல்லி வந்த பிரிவினைவாதிகள் கைது
டெல்லி : இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் வரும்ட்சத்தில் அவரை சந்திக்க வந்த காஷ்மீர் பிரிவினைவாதிகள் 4 பேர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், பிரிவினைவாத தலைவர்களுடனான சந்திப்பில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளதால் பேச்சுவார்த்தை நடப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் ஆகியோரது சந்திப்புக்கு இன்று திட்டமிடப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்காக இந்தியா வரும் சர்தாஜ் அஜிஸ், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களையும் சந்தித்து பேசுவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
அஜிஸ், காஷ்மீர் விவகாரத்தை தவிர இந்தியாவுடன் பேச ஏதுமில்லை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை தவிர பாகிஸ்தானுடன் வேறு எதைப்பற்றியும் பேச முடியாது என கூறினார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியா வரும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஹூரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும், இந்த சந்திப்பின்போது தீவிரவாதம் பற்றி பேசுவதற்கு மட்டுமே முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வரும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜுக்கு, பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் வரவேற்பு மற்றும் விருந்தில் பங்கேற்க காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தை சேர்ந்த இரு கோஷ்டி (மிதவாதம் மற்றும் தீவிரவாதம்) தலைவர்களுக்கும் பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் கலந்து கொள்ள ஹுரியத் மாநாட்டு உறுப்பினர் பிலால் லோன், ஷபீர் ஷா உட்பட நான்கு பிரிவினைவாதிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்தாஜ் அஜிஸ் இந்தியா வரும்பட்சத்தில் அவருடனான சந்திப்பை முறியடிக்கவே பிரிவினைவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காலில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.