காஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணரவில்லை.. சீனா வரட்டும் என நினைக்கிறார்கள்.. பரூக் அப்துல்லா பரபரப்பு
ஸ்ரீநகர்: தற்போதைய நிலைமையில் ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள் தங்களை இந்தியர்களாகவே உணரவில்லை, சீனப் படைகள் உள்ளே வந்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கும் மனநிலையில் இருக்கிறார்கள் என்று அம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது.
ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு பிறகு தற்போது 2ஜி சேவை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. பிற மாநில மக்களுக்கு உள்ள சுதந்திரம் வழங்கப்படவில்லை. தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்து விடும் என்று காரணம் காட்டி கெடுபிடிகள் செய்யப்படுகின்றன.
புதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'
விசாரித்து பாருங்கள்
இந்த நிலையில்தான் பரூக் அப்துல்லா ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உண்மையாகச் சொல்கிறேன் காஷ்மீரில் வசிக்கும் மக்களில் ஒருவர் கூட தங்களை இந்தியர்கள் என்று அழைத்துக் கொள்ள விரும்பவில்லை. மத்திய அரசு யாரிடம் வேண்டுமானாலும் சென்று கேட்டு பார்க்கட்டும்.
இந்தியர்கள் என்று நினைக்கவில்லை
காஷ்மீர் மக்கள் தங்களை பாகிஸ்தானியர்கள் என்று நினைக்கவில்லை. அதையும் நான் தெளிவுபடுத்தி விடுகிறேன். அதேநேரம் இந்தியர்கள் என்றும் அவர்கள் உணரவில்லை. எப்படி நாங்கள் வாழ்க்கை நடத்த போகிறோம் என்பதே எங்களுக்கு வியப்பாக இருக்கிறது.
விரக்தி
அரசை நம்ப முடியவில்லை என்ற மனநிலைக்கு காஷ்மீர் மக்கள் வந்து விட்டது தான் இதுபோன்ற விரக்தி நிலைக்கு காரணம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீர் மக்கள் நினைத்திருந்தால் பாகிஸ்தானுடன் இணைந்து இருக்கலாம். ஆனால் காஷ்மீர் மக்கள் காந்தியின் வழியில் இந்தியாவில் சேர்ந்தனர். அவர்கள் மோடியின் இந்தியாவில் இருப்போம் என்று நினைக்கவில்லை.
சீனாவுக்கு ஆதரவு
தற்போது, இந்திய எல்லைப் பகுதியில் சீனா முகாமிட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பெரும்பாலான மக்களிடம் வேண்டுமானால் பேசிப்பாருங்கள். சீனப் படைகள் காஷ்மீருக்குள் வந்தால் நல்லது என்று நினைக்கும் மனநிலையில் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு சீன நாட்டில் என்ன நடக்கிறது என்பதை இந்த மக்கள் அறிந்துதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் சீனா வந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் நிலையில் தான் இங்குள்ள மக்கள் இருக்கிறார்கள். இதை நான் வெளிப்படையாக தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் இதை பிறர் கேட்க விரும்ப மாட்டார்கள் என்று நான் அறிந்து உள்ளேன்.
எங்கே சுதந்திரம்
ஜம்மு காஷ்மீரில் இந்தியா பற்றி யார் பேசினாலும் அதை காது கொடுத்து கேட்க தயார் நிலையில் ஒருவரும் கிடையாது. இதற்கு இப்போதைய மத்திய அரசுதான் காரணம். ஒவ்வொரு தெருவிலும் இந்திய ராணுவத்தினர் ஏகே 47 துப்பாக்கியுடன் நின்று கொண்டு இருக்கிறார்கள். இங்கே சுதந்திரம் என்பது எங்கே இருக்கிறது? இவ்வாறு பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.