இந்தியாவில் இளவரசர் வில்லியம்... மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி!
மும்பை: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதி ஏழு நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்துள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவர் தனது மனைவி கேட் மிடில்டனுடன் ஒரு வார பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இன்று முதல் வரும் 17ம் தேதி வரை அரசு விருந்தினர்களாக அவர்கள் இந்தியாவில் தங்க உள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது மும்பை, கவுகாத்தி, ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கு அவர்கள் செல்ல இருக்கின்றனர்.
தாஜ் ஹோட்டல்...
இன்று மும்பை வந்தடைந்த வில்லியம் - கேட் தம்பதி, அங்குள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினர். 2008ஆம் ஆண்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இந்த ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பேர் மாண்டனர். எனவே, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வில்லியம் -கேட் தம்பதி அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமின்றி, அந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் சிலரையும் அவர்கள் சந்தித்தனர்.
கிரிக்கெட்...
பின்னர் தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த விளையாட்டு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் கலந்து கொண்டு குழந்தைகளை கேட் குதூகலப் படுத்தினார்.
4 வித உணர்வு...
இன்னும் ஆறு தினங்கள் வில்லியம் - கேட் தம்பதி இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர். இது குறித்து, டெல்லியில் உள்ள இங்கிலாந்தின் தலைமை தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அரச குடும்ப தம்பதியினர் இந்தியாவில் தங்கியிருக்கும் இந்த ஒருவார காலத்தில் கிரிக்கெட், இந்தி சினிமா, அரசியல் மற்றும் குடும்பம் என்றும் 4 வித உணர்வுகளை பெறுவார்கள்' எனத் தெரிவித்துள்ளது. மேலும், இளவரசர் வில்லியமின் இந்தியப் பயணத்தின் மூலம் இரு நாடுகளின் உறவும் பலப்படும்' என இங்கிலாந்து தூதரகம் தெரிவித்து உள்ளது.
டெல்லி பயணம்...
மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு, வில்லியம் தம்பதியினர் நாளை டெல்லி செல்கின்றனர் இந்த தம்பதி. டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் அவர்கள் அரசியல் தலைவர்களையும் சந்திக்கின்றனர்.
பூடான் பயணம்...
பின்னர் அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு செல்லும் அவர்கள், அந்த பூங்காவின் பாதுகாப்பில் கிராமப்புற மக்களின் பங்கு பற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டறிகின்றனர். அதைத் தொடர்ந்து பூடான் நாட்டுக்கு செல்லும் வில்லியம் தம்பதியினர் அந்நாட்டின் மன்னரையும், பூடான் ராணியையும் சந்தித்து பேசுகின்றனர்.
தாஜ்மகால்...
பின்னர் மீண்டும் இந்தியா திரும்பும், வில்லியம் - கேட் தம்பதி காதலின் நினைவுச்சின்னமாக போற்றப்படும், உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சென்று பார்வையிடுகின்றனர். அதன்பின்னர் அவர்கள் நாடு திரும்புகின்றனர்.
இந்தப் பயணத்தின் போது மும்பை, கவுகாத்தி, ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கு அவர்கள் செல்ல இருக்கின்றனர்.