காண்டான காத்மாண்டு.. நேபாளத்தில் பாஜக ஆட்சிக்கு வாய்ப்பில்ல பாஸ்.. முறையான எதிர்ப்பு
காத்மாண்டு: நேபாளத்திலும் பாஜக ஆட்சி அமைக்க அமித் ஷா திட்டமிட்டு வருவதாக பேசிய திரிபுரா முதல்வர் கருத்துக்கு நேபாள அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப், இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா விரும்புவதாக கூறினார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "உள்துறை அமைச்சரான அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவராக இருந்தபோது, அகர்தலா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், இந்திய மாநிலங்களை தாண்டி நேபாளம் மற்றும் இலங்கையிலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்" என்று கூறினார்.
நடவடிக்கை எடுங்க
திரிபுரா முதல்வரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறையாண்மை மிகுந்த நேபாளம், இலங்கை நாடுகளுக்கு எதிராக ஜனநாயக விரோதமாக பேசியிருக்கும் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறின.
ஆட்சேபத்துக்கு உரியது
இந்நிலையில், திரிபுரா முதல்வர் விப்லாப் தேவ் பேச்சு ஆட்சேபத்துக்கு உரியது என்று இந்தியாவுக்கான நேபாள தூதர் நிலம்பர் ஆச்சார்யா கூறியுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலர் அரிந்தம் பக்க்ஷியை தொடர்பு கொண்ட நேபாள தூதர் தமது நாட்டின் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவு
இந்த சூழலில், திரிபுரா முதல்வர் கருத்துக்கு நேபாள அரசு முறையாக தனது ஆட்சேபனையை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி தனது ட்விட்டரில், "முறையான ஆட்சேபனை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் வேலைக்கு ஆகாது
அதேபோல், திரிபுரா முதல்வர் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் நிமல் புஞ்சீஹேவா, "எந்தவொரு இலங்கை அரசியல் கட்சி அல்லது குழுவும் வெளிநாடுகளில் எந்தவொரு கட்சியுடனும் அல்லது எந்தவொரு குழுவுடனும் வெளிப்புற தொடர்புகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், எங்கள் தேர்தல் சட்டங்கள், வெளிநாட்டு அரசியல் கட்சிகளை இங்கு வேலை செய்ய அனுமதிக்கவில்லை" என்று கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.