கதுவா சிறுமி பலாத்காரம் ஒரு சாதாரண விஷயம்.. புதிய துணை முதல்வர் கவிந்தர் குப்தா சர்ச்சை பேச்சு
கதுவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது ஒரு சாதாரண விஷயம் என்று காஷ்மீர் மாநில புதிய துணைமுதல்வர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்: கதுவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது ஒரு சாதாரண விஷயம் என்று காஷ்மீர் மாநில புதிய துணைமுதல்வர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டு 4 நாட்கள் பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடந்து காஷ்மீரில் கூட்டணி ஆட்சியில் இருந்து பாஜகவின் இரு அமைச்சர்கள் பதவி விலகினர்.
புதிய துணை முதல்வர்
சிறுமி விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜம்மு காஷ்மீரின் புதிய துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த கவிந்தர் குப்தா நேற்று பதவியேற்றார்.
சாதாரண சிறிய விஷயம்
இந்நிலையில் பதவிக்கு வந்ததும் வராததுமாக துணை முதல்வர் கவிந்தர் குப்தா ஏழரையை கூட்டும் வகையில் பேசியுள்ளார். அதாவது, கதுவா சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு சிறிய விஷயத்தை நாடே பேசும் படி பெரிய விஷயமாக மாற்றிக் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
அவசியமில்லை
அதோடு இந்த அல்ப விஷயத்துக்காக அமைச்சரவையில் இருந்து தங்களது கட்சியை சேர்ந்த 2 பேர் விலகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து தனது கருத்திலிருந்து கவிந்தர் குப்தா பின்வாங்கியுள்ளார்.
தொடர்ந்து சர்ச்சை பேச்சு
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை ஒரு சாதாரண விஷயம் என துணை முதல்வர் கூறியிருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். இதனிடையே பாஜகவினர் தொடர்ந்து சர்ச்சை பேச்சுகளை பேசி வருவது குறிப்பிடத்தக்கது.