காஷ்மீர் சிறுமியை சிதைத்த கத்துவாவில் புதைக்க இடம் தர மறுத்த கிராமத்தினர்!
காஷ்மீர் சிறுமியை கத்துவாவின் ரசானா கிராமத்தில் புதைக்க இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 8 கிலோமீட்டர் தொலைவில் அவளின் உடல் புதைக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
Recommended Video
ஸ்ரீநகர் : கத்துவாவின் ரசானா கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலையில் கயவர்களால் சீரழிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. அதே கிராமத்தில் புதைக்க இந்துக்கள் இடம் தர மறுத்ததால் கிராமத்தை விட்டு தொலைவில் சிறுமியின் உடலை புதைத்தனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் காட்டிற்குள் குதிரை தேடிச் சென்ற 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு அதே காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். ஜனவரி 17ம் தேதி சிறுமியின் உடல் கண்டறியப்பட்டதையடுத்து அவரது வளர்ப்பு தந்தை சிறுமியின் உடலை ரசானா கிராமத்திலேயே புதைக்க நினைத்தார்.
சாலை விபத்தில் உயிரிழந்த தன்னுடைய 3 குழந்தைகள் மற்றும் தாயார் புதைக்கப்பட்ட அதே இடத்தில் சிறுமியை புதைக்க அவர் விரும்பினார். ஆனால் சிறுமியின் உடலை புதைக்க ரசானா கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறுமியை புதைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் முஸ்லிம் நாடோடிகளான பகர்வால் இனத்தவருடையது அல்ல என்பது அவர்களின் வாதம்.
எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்
சிறுமியை புதைக்க பாதி குழி தோண்டப்பட்ட நிலையில் அங்கு வந்த கிராம மக்கள் இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானதல்ல என்று ஏதோ பத்திரங்களை காட்டி சிறுமியை புதைப்பதை தடுத்ததாக அவளின் பாட்டி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலத்தை சிறுமியின் வளர்ப்பு பெற்றோர் இந்துக்குடும்பம் ஒன்றிடம் இருந்து வாங்கியுள்ளனர்.
சிறுமி குடும்பம் மீது குற்றச்சாட்டு
ஆனால் அவர்கள் பத்திரத்தை முழுவதுமாக படித்துப்பார்க்காததை சாதகமாக பயன்படுத்தி கிராமத்தினர் அவர்களை சிறுமியின் உடலை அங்கு புதைக்க விடாமல் தடுத்துவிட்டனர். இந்த நிலம் அவர்களுக்கு சொந்தமில்லை என்றும் இத்தனை ஆண்டுகளாக சட்டவிரோதமாக இறந்தவர்களின் உடல்களை இங்கு புதைத்துள்ளதாகவும் கிராமத்தினர் சிறுமியின் பெற்றோர் மீது குற்றம் சுமத்தியதாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலத்தை கைபற்றுவதால்
பக்கர்வால் இனத்தினர் எங்களின் நிலப்பகுதிகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்ள நினைப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இதனால் தான் சிறுமியை புதைக்க அனுமதிகொடுக்காததோடு, மாற்று இடத்தில் இறுதிச் சடங்கை செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் இந்த கிராமத்தை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த பெற்றோர்
இதனால் சிறுமியின் உடலை ரசானா கிராமத்தில் இருந்து 8 மைல் தொலைவில் உள்ள கானா கிராமத்திற்கு எடுத்துச் சென்று அங்கு அடக்கம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 3 மாதங்களில் சிறுமியின் வளர்ப்பு பெற்றோரும் அந்த மலைப்பகுதிக்கே இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். நாள்தோறும் அவளின் தாய் கல்லறைக்கு அருகில் அமர்ந்து நீண்ட நேரம் கண்ணீர் வடித்து செல்வதாக அந்தப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
புதைக்க மட்டும் இடமில்லை
கத்துவாவில் கொடூரமாக சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட எங்களின் குழந்தையை நாங்கள் கையில் வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் அவளை புதைக்கக் கூட நிலம் தரவில்லை கிராம மக்கள், அந்தச் சிறுமியை புதைக்க எவ்வளவு இடம் தேவைப்பட்டு விடப்போகிறது என்று வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர் சிறுமியின் குடும்பத்தார்.