‘கட்ஜூ குற்றச்சாட்டு வெட்டிப் பேச்சு’... கருத்துக் கூற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறுப்பு
டெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கட்ஜூ எழுப்பிய குற்றச்சாட்டை பயனற்ற விவகாரம் என விமர்சித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்டு கருத்துக் கூற மறுத்து விட்டார்..
சமீபத்தில் மத்தியில் ஆண்ட முன்னாள் காங்கிரஸ் அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு.
அதாவது, நீதிபதிகள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தமிழகத்தில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளான ஒரு நீதிபதிக்கு சென்னை ஹைகோர்ட்டின் உயர் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், சர்ச்சைக்குரிய அந்த நீதிபதி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தபோதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த தமிழகத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியின் அழுத்தத்தை தொடர்ந்து அப்போதைய அரசு தலையிட்டதால் அந்த நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காமல், மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பும் செய்யப்பட்டது என்றும் கட்ஜு தெரிவித்திருந்தார்.
கட்ஜுவின் இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்க வேண்டும் என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பின.
ஆனால், தற்போது பதவியில் இல்லாத மன்மோகன் சிங் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை என மத்தியில் ஆளுங்கட்சி சார்பில் பதிலளிக்கப் பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ‘இப்தார்' விருந்து நடத்தப்பட்டது. அதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கட்ஜுவின் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மன்மோகன் சிங், ‘அது ஒரு பயனற்ற வீண் (வெட்டி) விவகாரம். முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கூட இது தொடர்பாக பேசி இருந்தார். இவ்விவகாரத்தில் நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை' எனப் பதிலளித்தார்.
மேலும், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்த கேள்வியொன்றுக்கு, ‘ ஆளும் அரசுக்கு நாம் இன்னும் அதிக அவகாசம் வழங்க வேண்டும்' என மன்மோகன் சிங் தெரிவித்தார்.