மார்க்கண்டேய கட்ஜு எங்கே?
சென்னை: ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தமிழர்களின் மனதைத் தொட்டவர், இதயம் கவர்ந்தவர். காரணம், தன்னைத் தமிழனாக வரித்துக் கொண்டு பாசம் காட்டியவர் இந்த சட்டமேதை. ஆனால் இவரை இப்போது சமூக ஊடகங்களில் எங்குமே காண முடியவில்லை.
கடந்த மே மாதத்தோடு சமூக வலைதளங்கிலிருந்து விடை பெற்று விட்டார் கட்ஜு. அதன் பிறகு டிவிட்ட்டர், பேஸ்புக், பிளாக் என எதிலுமே அவர் இல்லை. அவரது கருத்துக்களும், கட்டுரைகளும் வெளியாவது போல தெரியவில்லை.
மற்ற மாநில மக்களுக்கு எப்படியோ தமிழ்நாட்டு மக்களால் மறக்க முடியாதவர் கட்ஜு. காரணம், ஜல்லிக்கட்டு விவகாரத்தின்போதும் அதைத் தொடர்ந்தும் பல விதமான யோசனைகளை தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து தந்து கொண்டிருந்தவர் கட்ஜு.
ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்தவர்
ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் கட்ஜு. தேவையான சட்ட யோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வந்தார். அதைக் கேட்காத தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்தவர் கட்ஜு.
ஜல்லிக்கட்டு புரட்சி
மெரீனா கடற்கரையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் நடத்திய புரட்சிப் போராட்டம் அவரை நெகிழ வைத்தது. நானும் ஒரு தமிழன் என்று முழக்கமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கட்ஜு.
சசிகலா குடும்பம்
சசிகலா குடும்பம் தமிழக ஆட்சியைப் பிடிக்க எத்தனித்தபோது தமிழக மக்கள் அமைதியாக இருந்ததைப் பார்த்து வெகுண்டு எங்கே போயிற்று உங்களது வீரம் என்று கோபாவேசம் காட்டினார் கட்ஜு.
ரஜினி மீது விமர்சனம்
அதன் பின்னர் ரஜினி காந்த் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்தவர் கட்ஜு. அதுதான் அவருக்கும், தமிழகத்துக்குமான கடைசி தொடர்பாகவும் போனதுதான் சுவாரஸ்யமானது. அதாவது கடந்த மே மாதம் ரஜினியை கடுமையாக விமர்சித்து கருத்து வைத்த கையோடு சமூக ஊடகங்களிலிருந்து அவர் விலகியிருக்கிரார்.
சமூக பிரச்சினைகளில்
நாட்டின் முக்கியப் பிரச்சினைகளில் தனது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறியவர் கட்ஜு. மிகத் தைரியமாக அவர் வைத்த கருத்துக்கள் நாட்டு மக்களின் கவனம் ஈர்த்தவையாகும். குறிப்பாக பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு ஒழிப்பை கடுமையாக விமர்சித்திருந்தார் கட்ஜு.
மீண்டும் வருவாரா?
கட்ஜூ ஏன் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளப் பக்கம் வரவில்லை என்று தெரியவில்லை. உடல் நலப் பிரச்சினையா அல்லது சமூக ஊடகங்களை விட்டு நிரந்தரமாக விலகி விட்டாரா என்று தெரியவில்லை.
வர வேண்டும்
உண்மையில் கட்ஜுவின் கருத்துக்கள் பகிரப்படாத சமூக வலைதளங்கள் வறண்டு போய்த்தான் காணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும் தமிழகத்தில் ஓவியா மோகம் பீடித்துள்ள இந்த நிலையில் கட்ஜுவின் சாட்டை தமிழக இளைஞர்களுக்குத் தேவைப்படுகிறது. அதற்காகவாவது அவர் திரும்ப வர வேண்டும்.