ஜல்லிக்கட்டு: அவசர சட்டத்தை தமிழக அரசே பிறப்பிக்கலாமே... ஜெ.வுக்கு கட்ஜு "இமெயில்"!
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் அவருக்கு யாரோ தவறான ஆலோசனை கூறியுள்ளனர். உண்மையில் தமிழக ஆளுநர் மூலம் தமிழக அரசே இந்த அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வழி உண்டு என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது இணையதளத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ள செய்தி...
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும். மேலு் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும், அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவருக்கு அவரது சட்ட வல்லுனர்கள் தவறான ஆலோசனை தந்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் அமூஸ்மென்ட் ஆகியவை மாநில அரசின் பட்டியலில் உள்ள 33 ஐட்டங்களின் கீழ்தான் வருகின்றன. அரசியல் சட்டத்தின் 7வது அட்டவணையில் இதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே இதைப் பயன்படுத்தி தமிழக அரசு, தமிழக ஆளுநர் மூலமாக அவசரச் சட்டத்தை தானே பிறப்பிக்க முடியும். இதற்காக மத்திய அரசை அணுகத் தேவையே இல்லை.
மாநில அரசு இந்த அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கும்போது, மனித உயிர்களுக்கும், விலங்குகளுக்கும் ( காளை மாடுகள்) அதீத உயிர் அபாயம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வாசகத்தைச் சேர்த்தால் போதும்.
மேலும் ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு, அமூஸ்மென்ட் ஆகிய வகையின் கீழ் வரும் என்பதால் இந்த அவசரச் சட்டத்திற்கும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கும் இடையே முரண் வராது.
இந்தக் கருத்தை யாராவது ஜெயலலிதாவிடம் கொண்டு சேர்ப்பார்களா என்று கூறியுள்ளார் கட்ஜு.
கட்ஜுவின் இந்தப் பதிவைப் படித்த கார்த்திகேயன் என்பவர் முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ இமெயில் முகவரிகளை ([email protected] / [email protected]) கட்ஜுவுக்குக் கொடுத்து இதை அந்த முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரியிருந்தார். அதை ஏற்று உடனடியாக அதில் அனுப்பி வைத்துள்ளதாகவும், முதல்வர் இதைப் படிப்பார் என்று நம்புவதாகவும் கட்ஜு தெரிவித்துள்ளார்.
மேலும் விலங்குகளுக்குக் கொடுமை என்பது எல்லா இடத்திலும் உள்ளதுதான் என்றும் கூறியுள்ள கட்ஜு, சிக்கன் சாப்பிடுகிறோம், மீன் சாப்பிடுகிறோம்.. அதெல்லாம் கொடுமை இல்லையா என்றும் கேட்டுள்ளார்.