மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியும்.. கர்நாடகம் திட்டவட்டம்
Recommended Video
டெல்லி: மழை பெய்தால் மட்டுமே காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என்று கர்நாடகா திட்டவட்டமாக கூறியுள்ளது.
டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 9-வது கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் தமிழகத்தின் சார்பாக திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செல்வராஜூ, காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தங்களது அணைகளில் உள்ள நீர் இருப்பு, இதுவரையிலான காவிரி நீர் பங்கீடு அடங்கிய தரவுகளை அந்தந்த மாநிலஙகள் தனித்தனியாக தாக்கல் செய்தன.
அப்போது ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என, காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கர்நாடகம், இதுவரை தமிழகத்திற்கு 1.720 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளதாக கூறியது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக அதிகாரிகள், காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பொய்த்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என வாதிட்டனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லாததால், இனி தங்கள் மாநிலத்தில் நல்ல மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விட முடியும் என கர்நாடகம் வாதிட்டது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் எந்த அளவிற்கு மழை பெய்துள்ளது என்பது பற்றி கூட்டத்தில் கலந்துரையாடியதாக கூறினார்.
ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 19ம் தேதி வரை பிலிகுண்டு வழியாக தமிழகத்திற்கு, 1.729 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பேசிய நவீன்குமார் ஜூன் 1 முதல் தற்போது வரையில் பருவமழையை கண்காணித்ததில், எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம் என குறிப்பிட்டார்.
மழை இல்லாததை காரணம் காட்டி காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகம் கைவிரித்து விட்டதால், தமிழகத்திற்கு தற்போதைக்கு காவிரி நீர் கிடைக்காது என்பது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது.
எனினும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை, காவிரி ஒழுங்காற்று குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அறிக்கையாக விரைவில் தாக்கல் செய்ய உள்ளது.
அதன் விவரங்கள் பற்றி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படும். அப்போது தான் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா கிடைக்காதா என்பது தெளிவாக தெரிய வரும்.