அஸ்ஸாமில் கொட்டி வரும் மழை.. 90% வெள்ளத்தால் சூழ்ந்த கசிரங்கா தேசிய பூங்கா.. ஆபத்தில் வனவிலங்குகள்
குவாஹாத்தி: அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழையால் கசிரங்கா தேசிய பூங்கா 90 சதவீதம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கிருந்த 11 காண்டாமிருகங்கள் உள்பட 120 வனவிலங்குகள் நீரில் மூழ்கி இறந்துவிட்ட சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாமில் கான்ஜௌரியில் கசிரங்கா தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உலக புகழ்பெற்ற ஒற்றை கொம்புடைய காண்டாமிருகங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதாவது உலகில் 3-இல் ஒரு பங்கு ஒற்றை கொம்புடைய காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன.
இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் உள்ளன. இந்த தேசிய பூங்காவை அடைய பிரம்மபுத்திரா உள்பட 4 முக்கிய ஆறுகளை கடக்க வேண்டும். இந்த பூங்காவில் ஏராளமான சிறிய நீர் நிலைகள் காணப்படுகின்றன.
துருவாஸ்டிரா.. இரவோடு இரவாக இந்தியா செய்த 3 ஏவுகணை சோதனை.. சத்தமின்றி நடத்தப்பட்ட அதிரடி மூவ்!
அஸ்ஸாம்
கொரோனா பாதிப்பால் இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் அஸ்ஸாமில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலையில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. கசிரங்கா தேசிய பூங்கா 90 சதவீதம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால் காண்டாமிருகங்கள், யானைகள், மான்கள் உள்ளிட்டவை சாலைகளிலும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தஞ்சமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
பலி
எனினும் 11 காண்டாமிருகங்கள் உள்பட 120-க்கும் மேற்பட்ட மிருகங்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டன. 147 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் காட்டு விலங்குகளின் வாழ்வியல் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் இருவர் பலியாகிவிட்டனர்.
26 பேர் நிலச்சரிவில் பலி
26 மாவட்டங்களில் மொத்தம் 26 லட்சம் பேர் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மழை வெள்ளம், நிலச்சரிவால் இறந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துவிட்டது. அதாவது 89 பேர் மழை வெள்ளத்தாலும் 26 பேர் நிலச்சரிவிலும் இறந்துவிட்டனர்.
மழை வெள்ளம்
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கூறுகையில் தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாந்த், சோனிட்பூர், டர்ராங், பக்ஷா, நல்பாரி, சீராங், நாகான், கோலாகட், மஜூலி, திப்ரூகார் உள்பட 25 மாவட்டங்களில் உள்ள 24.58 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றனர்.