நதியோரம் தலைநகரம் அமைந்தால் நல்லாத்தான் இருக்கும்- நாயுடுவுக்கு வாழ்த்து சொன்ன கே.சி.ஆர்
நகரி: ஆந்திராவில் வாஸ்துப்படி அமைக்கப்பட உள்ள புதிய தலைநகருக்கு தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திரா, தெலுங்கானா மாநில கவர்னர் பொறுப்பை ஏற்றுள்ள நரசிம்மன் குடியரசு தின விழாவையொட்டி நேற்று 2 மாநிலத்திலும் தேசிய கொடி ஏற்றினார்.
முதலில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்றி விட்டு ஹைதராபாத் சென்று தெலுங்கானா மாநில குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார்.
மாலை ஹைதராபாத் கவர்னர் மாளிகையில் இரு மாநில முதல்வர்களுக்கும் தேனீர் விருந்து அளித்தார்.
இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் இரு மாநில சபாநாயகர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆந்திர , தெலுங்கானா மாநிலங்கள் இடையே நதிநீர் பங்கிடுவதில் உள்ள பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் முயற்சியில் கவர்னர் நரசிம்மன் ஈடுபட்டார். மேலும் நுழைவு தேர்வை இரு மாநிலமும் ஆண்டுக்கு ஒரு மாநிலம் நடத்தலாம் என யோசனை கூறினார்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விருந்தில் இரு முதல்வர்களும் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர்.
கிருஷ்ணா நதி அருகே துல்லூர் பகுதியில் ஆந்திர புதிய தலைநகர் அமைக்க சந்திரபாபு நாயுடு எடுத்த முடிவுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் பாராட்டினார்.
நதியோரம் தலைநகர் அமைவது வாஸ்துபடி சிறந்தது எனக்கூறிய அவர் நதி ஓரம் தலைநகர் இருந்தால் அது சிறப்பாக இருக்கும் என்றார். இதனை சந்திரபாபு நாயுடு ஆமோதித்தார்.
கிருஷ்ணா நதியில் பாலங்களும் மற்றும் வானுயர கட்டிடங்களும் நிர்மாணித்து உலகில் சிறந்த தலைநகராக அமைக்கும்படி சந்திரபாபு நாயுடுவிடம் அவர் கேட்டுக் கொண்டார்.