படுக்கை வசதியுடன் தெலுங்கானா முதல்வர் வாங்கிய குண்டு துளைக்காத பஸ்.. விலை ரூ.5 கோடி!
ஹைதராபாத்: படுக்கைவசதியுடன் கூடிய குண்டு துளைக்காத நவீன பஸ்சை தனது பயன்பாட்டுக்காக வாங்கியுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். எதிர்பார்த்ததை போலவே எதிர்க்கட்சிகளிடமிருந்து இதற்காக எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ஆந்திராவிலிருந்து பிரித்து, புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வர் என்ற பெருமையுடன் அரியணை ஏறியுள்ளார் கே.சந்திரசேகரராவ். அவ்வப்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன், பங்காளி சண்டையி்ல ஈடுபட்டாலும், மாநிலத்தை பல வகைகளில் முன்னேற்ற திட்டங்களை கொண்டுவர முனைப்பு காட்டுகிறார்.
இந்நிலையில், தான் பயணிக்க, ரூ.5 கோடி செலவில், குண்டுதுளைக்காத நவீன பஸ் ஒன்றை அரசு செலவில் வாங்கியுள்ளார் ராவ். மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த பஸ்சை, துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாது. குண்டுகளால் தகர்க்க முடியாது.
பஸ் உள்ளே, பாத்ரூம், கழிவறை, மீட்டிங் ஹால், படுக்கையறை, இணையம் என சகல வசதிகளும் உள்ளன. குடிநீர் வினியோக திட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை நேரில் சென்று கண்டறிய உள்ளாராம் ராவ். இதற்காக மாதத்தில் 10 நாட்களாவது இந்த பஸ்சில் மாநிலமெங்கும் சுற்றப்போகிறாராம். எனவேதான் இந்த பாதுகாப்பு வாகனம் அவசியப்பட்டுள்ளது என்கிறது அரசு தரப்பு.
அதேநேரம், எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவர் ஹனுமந்தராவோ, இதை அநாவசிய செலவு என கூறுகிறார். இந்த பணத்தை ஏழைகள் நலத்திட்டத்திற்காக கொடுத்திருக்கலாம் எனவும், தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாதுகாப்பு இல்லாமல்தானே சந்திரசேகரராவ் மாநிலம் முழுவதும் சுற்றித்திரிந்தார், இப்போதும் அப்படியே செல்லட்டும் என்றும் ஹனுமந்தராவ் கூறியுள்ளார்.