தெலுங்கானா முதல்வரின் வாஸ்து மோகத்தால் அரசுக்கு ரூ.150 கோடி செலவு
ஹைதராபாத்: கே. சந்திரசேகர ராவுக்கு வாஸ்து மீது உள்ள மோகத்தால் தெலுங்கானா மாநில அரசுக்கு ரூ. 150 கோடி செலவாக உள்ளது. வாஸ்து பார்ப்பது, ஜோதிடர்கள் கூறுவதுபடி நடப்பது அரசியல் தலைவர்களுக்கு புதிது அல்ல. வாஸ்து, ராசிப்படி அரசியல் தலைவர்கள் தங்களின் பெயர்களை மாற்றியது, அலுவலகங்களை மாற்றிய சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது.
தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் வாஸ்துபடி தனது தலைமைச் செயலகத்தை புதிய இடத்திற்கு மாற்றுகிறார். அதற்காக அவர் ரூ.150 கோடி அரசு பணத்தை செலவிடுகிறார்.
நிதியை எதிர்பார்த்து இருக்கும் புதிய மாநிலமான தெலுங்கானாவில் புதிய தலைமைச் செயலகத்திற்கு இவ்வளவு செலவு தேவைதானா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் கே. சந்திரசேகர ராவ் அதை எல்லாம் கண்டுகொள்வதாக இல்லை.
வாஸ்து மோகம்
டேங்க் பன்டில் உள்ள தலைமைச் செயலகம் ராசியாக இல்லை என்று கே.சி.ஆர். தெரிவித்துள்ளார். அந்த அலுவலகத்தில் இருந்து வேலை செய்வதால் பல பிரச்சனைகள் ஏற்படுவதுடன், திட்டமிட்டவைகள் திட்டமிட்டபடி நடப்பது இல்லையாம். இதனால் தற்போதைய தலைமைச் செயலகத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எர்ரகடாவில் புதிய அலுவலகத்தை கட்ட உள்ளனர். பல வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்களுடன் கலந்தாய்வு செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
ராசி
ஜோதிடர்கள் பேச்சை கேட்டு நடப்பதால் தனக்கு எல்லாம் நல்லதே நடக்கும் என்று கே.சி.ஆர். நம்புகிறார். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அவருக்கு எண் 6 தான் ராசியானது என ஜோதிடர்கள் தெரிவித்தனர். ஜோதிடர்கள் கூறியவாரே நடந்து தேர்தலில் வெற்றி பெற்றார் கே.சி.ஆர். அவர் தனது வீட்டில் மாற்றம் செய்ததுடன், தனது கார்களின் எண்களை 6666 என மாற்றினார். ஜோதிடர்களின் அறிவுரைப்படி அவர் தனது கார்களின் நிறத்தை கருப்பில் இருந்து வெள்ளையாக மாற்றினார்.
ஜோதிடர்கள்
ஜோதிடர்களின் அறிவுரைப்படி தான் கே.சி.ஆர். தலைமைச் செயலக கட்டிடத்தை மாற்றுகிறார். முதலில் தலைமைச் செயலகத்தில் மாற்றம் செய்ய முயற்சி நடந்தது. ஆனால் அது ஜோதிடர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்த கட்டிடத்தில் அமர்ந்து பணியாற்றிய அனைத்து முதல்வர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது என்று ஜோதிடர்கள் அவரிடம் தெரிவித்தனர்.
என்.டி.ஆர்.
டேங்க் பன்டில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய என்.டி. ராமா ராவ் தனது முதல்வர் பதவியை மருமகன் சந்திரபாபு நாயுடுவிடம் பறிகொடுத்தார். நாயுடு ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியால் தோற்கடிக்கப்பட்டார். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவர் இறந்த பிறகு முதல்வரான ரோசைய்யாவால் நீடிக்க முடியவில்லை. ரோசையாவை அடுத்து முதல்வரான கிரண் குமார் ரெட்டி பிரச்சனை மேல் பிரச்சனைகளை சந்தித்தார்.
மூடநம்பிக்கை
வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜோதிடத்தை பின்பற்றுபவர். 2001ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் என ஜோதிடர் ஒருவர் தெரிவித்தார். அதில் இருந்து அவருக்கு ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை வந்துவிட்டது. அவர் எதை செய்தாலும் ஜோதிடரை கேட்டுவிட்டு தான் செய்வார் என்று கூறப்படுகிறது. அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்தபோது கூட முதல்வர் பதவிக்கு 4 பேரின் பெயர்களை ஜோதிடர்களிடம் பரிந்துரைத்துள்ளார். பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினால் அவருக்கு பிரச்சனையாக இருக்காது என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகே ஓ. பன்னீர் செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டாராம்.
எதியூரப்பா
முன்னாள் கர்நாடக முதல்வர் பி.எஸ். எதியூரப்பாவும் ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் ஆவார். அவர் ஜோதிடரின் அறிவுரைப்படி தனது பெயரில் சில
எழுத்துக்களை மாற்றினார். அவர் கர்நாடக முதல்வராக இருக்கையில் ஒவ்வொரு பெரிய விஷயத்தை செய்யும் முன்பும் கோவில்கள் மற்றும் மடங்களுக்கு சென்று வந்தார்.