பத்திரிகையாளர் கழுத்தை நெறிப்போம்.. குழிதோண்டி புதைப்போம்: சந்திரசேகர்ராவ் பகிரங்க மிரட்டல்!!
ஹைதராபாத்: தெலுங்கானாவை அவமதிக்கும் பத்திரிகையாளர்களை குழிதோண்டி புதைப்போம்.. கழுத்தை நெறிப்போம் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர்ராவ் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநில சட்டசபையின் நடவடிக்கைகளை 2 தொலைக்காட்சி சேனல்கள் விமர்சனம் செய்தன. சட்டசபையில் மின் விளக்குகள் கூட சரியில்லை என்று கூறி அதையும் விரிவாக ஒளிபரப்பு செய்தன.
இதனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக கோபம் அடைந்தார். இது தவிர அந்த சேனல்களில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலும் தெலுங்கானா ஆட்சி குறித்து விமர்சனங்கள் செய்யப்பட்டன.
கோபத்தில் சந்திரசேகர்ராவ்
இது சந்திரசேகரராவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தெலுங்கு கவிஞர் கலோஜி நாராயணராவ் கலாசார மைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட சந்திரசேகர் ராவ் பேசியதாவது:-
தூக்கி எறிவோம்
தெலுங்கானாவின் கலாசாரத்தையும் சுயமரியாதையும் மதிக்கப்பட வேண்டியது அவசியம். யாராவது இதை அவமதித்தால் தூக்கி எறிவோம்.
குழிதோண்டி புதைப்போம்
தெலுங்கானா சட்டசபையை அவமதிப்போரை அனுமதிக்க மாட்டோம். இந்த சேனல்கள் இது போன்ற விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க மாட்டோம். தெலுங்கானாவை அவமதிப்பவர்களை 10 அடி குழி தோண்டி புதைத்து விடுவோம். தேவைப்பட்டால் கழுத்தை நெறிப்போம்.
தக்க பாடம் புகட்டுவோம்
அந்த இரண்டு தொலைக்காட்சிகளும் தொடர்ந்து இது போன்று நடந்து கொண்டால் கேபிள் ஆபரேட்டர்கள் அந்த சேனல் ஒளிப்பரப்பை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும்.
இவ்வாறு சந்திரசேகர ராவ் பேசினார்.
செய்தியாளர்கள் போராட்டம்
இந்த நிலையில் 2 தொலைக்காட்சிகளின் ஒளிப்பரப்பு நிறுத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொலைக்காட்சி செய்தியாளர்கள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.