இடஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயரில் எம்.எல்.ஏ., எம்.பி.க்களா?: ஓ.பி.சி. நாடாளுமன்ற கமிட்டி எதிர்ப்பு
டெல்லி: இடஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயருக்குள் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை சேர்க்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரைத்ததை பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நாடாளுமன்ற குழு கடுமையாக எதிர்த்துள்ளது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனானது அண்மையில் இடஒதுக்கீடு தொடர்பாக சில பரிந்துரைகளை முன்வைத்தது. அதில், எம்.பி. எம்.எல்.ஏக்கள் இடஒதுக்கீடு உரிமையைப் பெற தகுதியற்றவர்கள்; மத்திய, மாநில அரசுப் பணிகளில் ரேங்க் -1 அலுவலர்களுக்கும் இடஒதுக்கீடு உரிமை கூடாது; அதேபோல் ஆண்டு வருமானம் ரூ20 லட்சம் இருப்பவர்களுக்கும் (தற்போது ரூ6 லட்சம் என்ற வரம்பு உள்ளது; இதை ரூ10 லட்சமாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது) இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக நேற்று ஆலோசனை பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நாடாளுமன்றக் குழு நடத்தியது.
அதில், மத்திய அரசுப் பணிகளில் 27% இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கின்ற போதும் அது முழு அளவில் நடைமுறையில் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கும் இடஒதுக்கீடு கூடாது என்ற பரிந்துரையும் இக்குழு நிராகரித்திருக்கிறது.
அத்துடன் இத்தகைய பரிந்துரைகளே கிரீமிலேயர் முறையை இடஒதுக்கீட்டில் எங்கேனும் ஒரு இடத்தில் புகுத்தி அதை அப்படியே விரிவாக்கம் செய்து ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீட்டு முறையையே ஒழிப்பதற்கான முன்னோட்டம்தான் இது என்றும் சமூக வல்லுநர்கள் சாடியுள்ளனர்.