ஐந்து மாநில தேர்தல் எதிரொலி.. ஏழைகள், விவசாயிகள் மீது பாசத்தைக் கொட்டிய ஜேட்லி பட்ஜெட்!
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஊரகப் பகுதி மக்களுக்கு சாதகமான பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய அருண் ஜேட்லி கூறஉகையில், உணவுப் பாதுகாப்பு, வருவாய் பாதுகாப்பு ஆகியவற்றையும் தாண்டி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. விவசாயிகளின் வருவாயை 2022ம் ஆண்டுக்குள் நாம் இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளோம் என்றார்.
விவசாயிகள் நலனிற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 35,984 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார் ஜேட்லி. ஊரக வளர்ச்சிக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் ரூ. 87,765 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலின்போது இந்தியாவின் "9 தூண்களாக" ஜேட்லி வர்ணித்ததில் விவசாயமும், ஊரக வளர்ச்சியும் அடக்கமாகும்.
நீர்ப்பாசனத் துறைக்காக மட்டும் ரூ. 20,000 கோடியை அறிவித்துள்ளார் ஜேட்லி. இது நபார்ட் வங்கி மூலம் திரட்டப்படும்.
மேலும், கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு ரூ. 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி உதவியையும் அறிவித்துள்ளார் ஜேட்லி. கிராமப் பஞ்சாயத்துக்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு அளவு 228 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஊரகச் சாலைகள் மேம்பாட்டுக்கான மத்திய திட்டத்திற்காக ரூ. 19,000 கோடி செலவிடப்படும். மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்துக் கிராமங்களிலும் 100 சதவீத மின்சார வசதியை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஜேட்லி கூறினார்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் விவசாயம், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து வளர்ச்சி ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதை மனதில் வைத்து இந்த சலுகைகளை மத்திய அரசு அளித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.