டெல்லி போலீஸ் மீது கெஜ்ரிவால் சரமாரி புகார்.. விபச்சாரத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு
டெல்லியில், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அலுவலகம் முன்பு தர்ணா நடத்தப் புறப்பட்ட கெஜ்ரிவால், ரயில் பவன் அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். டெல்லி போலீஸார் அவரது காரை தடுத்து நிறுத்தியதால் காருக்குள்ளேயே பிற்பகல் 12.30 மணி வரை அமர்ந்திருந்தார் கெஜ்ரிவால்.
பின்னர் வெளியே வந்த அவர் அங்கு கூடியிருந்தோர் மத்தியில் ஆ்வேசமாகப் பேசினார். அவரது பேச்சிலிருந்து...
டெல்லி முதல்வராகிய நான், மத்திய அரசின் வசம் உள்ள டெல்லி காவல்துறைக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்துகிறேன் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
டெல்லியில் தினசரி பாலியல் பலாத்காரங்கள் தொடருகின்றன.. என்ன நடவடிக்கை எடுத்தது போலீஸ் .. பலாத்காரங்கள் தொடருவதற்கு டெல்லி போலீஸாரே பொறுப்பு..
தவறு செய்த டெல்லி காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மறுக்கிறார். அவரது அமைச்சகத்தின் கீழ்தான் இவர்கள் வருகின்றனர்.
உகாண்டா பெண்களை வேலை தருகிறோம் என்று சொல்லி அழைத்து விபச்சாரத்தில் தள்ளுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புலம்புகிறார்கள். இதுதொடர்பாக உகாண்டா தூதரகமே எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தியைப் பாராட்டி அவர்கள் எழுதியுள்ளனர்.
அதேபோல, டென்மார்க் பெண்ணை கற்பழித்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏரியா இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்யச் சொல்வது தவறா... போலீஸுக்குத் தெரியாமல் செக்ஸ் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை.
போலீஸ் தனது பணியைச் செய்யாவிட்டால் அமைச்சர்கள் களத்தில் இறங்கித்தானே ஆக வேண்டும். ஏசி அறைக்குள் உட்கார்ந்து வேலை பார்ப்பதுதான் அமைச்சர்கள் வேலையா... அல்லது அமைச்சர்கள் என்றால் அறைக்குள்ளேயேதான் இருக்க வேண்டுமா.. மக்களுக்காக சாலையில் இறங்கிப் போராடினால் அது தவறா...
டெல்லியில் தொடர்ந்து பலாத்காரங்கள் நடந்து கொண்டு உள்ளன. இதுகுறித்து காவல்துறையிடம் கேட்டால் விசாரணை நடக்கிறது என்கிறார்கள். விசாரணை மட்டும் போதுமா, நடவடிக்கை ஏதும் வேண்டாமா.
அமைச்சர்கள் இப்படி போராட்டம் நடத்துவது சரியல்ல என்கிறார் டெல்லி போலீஸ் கமிஷனர். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், அமைச்சர்கள் என்ன செய்வார்கள். கேட்கத்தானே செய்வார்கள்.
மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் போராட்டம் நடத்தக் கூடாதா..
போலீஸார் கவனிக்கத் தவறினால், மக்கள் என்னதான் செய்வார்கள். போலீஸார் தங்களது கோரிக்கைகளை கவனிக்கவில்லை என்று மக்கள் அமைச்சர்களிடம் வந்தால், அமைச்சர்கள் என்ன செய்வார்கள்.. போலீஸாரைக் கேட்கத்தானே செய்வார்கள்.
நான் இன்று அல்ல, 10 நாட்கள் கூட தர்ணா போராட்டம் நடத்த தயாராக இருக்கிறேன். நீதி கிடைக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். போலீஸாரும் பங்கேற்க வேண்டும். வேலையை விட்டு விட்டு ஆம் ஆத்மியுடன் இணைந்து போராடுங்கள்.
மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு முதல்வரே சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் டெல்லி உள்ளது என்றார் கெஜ்ரிவால்.