எங்கும் தூசு மண்டலம்… புகை மூட்டம்.. டெல்லியை என்ன செய்வது… கெஜ்ரிவால் அவசர ஆலோசனை
டெல்லியை சூழ்ந்துள்ள பனிப்புகை, காற்று மாசை என்ன செய்வது என்பது குறித்து அமைச்சரவையை கூட்டி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு பின்னர் பனிப்புகை அதிகமாகி மக்கள் நடமாடுவதற்கே சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்க அமைச்சர்கள் அவையை இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டினார்.
உலகிலேயே அதிக அளவு காற்று மாசடைந்த நகரில் ஒன்றாக இந்தியாவின் தலைநகரமான டெல்லி உள்ளது. இங்கு கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு காற்று மாசடைந்துள்ளதால் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். காலையில் பனி விலகாமல் நீண்ட நேரம் இருப்பதால் பள்ளி செல்வோர், அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டத்தில் எழுந்த புகையால் டெல்லி இன்னும் மோசமான நகரமாக மாறிவிட்டது.
இந்நிலையில் 10 லட்சம் மாணவர்கள் படிக்கும் சுமார் 1700 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லிவாசிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் காற்று மாசை போக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்நிலையில், இன்று பிற்பகல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை கட்டுப்படுத்துவது, பனிப்புகையை போக்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுகுறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயப் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.