மோடி பரிந்துரைத்த டாக்டரிடம் இன்னும் கெஜ்ரிவால் 'அப்பாயிண்ட்மெண்ட்' வாங்கவில்லையாம்!
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்தபடி இன்னும் பெங்களூரு டாக்டர் நாகேந்திராவிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிகிச்சைக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவில்லையாம்.
டாக்டர் நாகேந்திரா, பெங்களூரில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தானாவின் துணைவேந்தராக இருக்கிறார். இவரது பெயர் தற்போது நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளது.
காரணம், பிரதமர் மோடி. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம், நாகேந்திராவின் பெயரை மோடி பரிந்துரைக்கப் போக இப்போது நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளார் நாகேந்திரா.
கெஜ்ரிவால் என்றால் உடனே நினைவுக்கு வருவது அவரது மப்ளர் மட்டுமல்ல, இருமலும் கூடத்தான். அவரை விட்டு இருமல் போவதாகவே இல்லை. நீண்ட காலமாக இந்தத் தொல்லையால் அவர் அவதிப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் இறுமியபடி இருந்தார். இதைப் பார்த்த மோடி அவரிடம் ஏன் இப்படி விடாமல் இருமுகிறீர்கள், எத்தனை காலமாக இது உள்ளது என்று அக்கறையுடன் விசாரித்தார்.
அதன் பிறகுதான் அவர் டாக்டர் நாகேந்திராவின் பெயரைப் பரிந்துரைத்தார். அவரைப் போய்ப் பாருங்கள். இருமலை முழுமையாக குணப்படுத்தி விடுவார்என்று மோடி தெரிவித்தார்.
இதன் மூலம் நாகேந்திரா தற்போது பிரபலமாகியுள்ளார். இதுகுறித்து அவரிடம் ஒன்இந்தியா கேட்டபோது, இன்னும் கெ்ஜரிவால் தரப்பில் யாரும் என்னிடம் வரவில்லை. பேசவும் இல்லை. பிரதமர் மோடி எனது பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளார்.
அதன் மூலம் என்னை அவருக்குத் தெரியும். பிரதமர் என்னைச் சந்தித்துள்ளார். நான் எப்படி நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறேன் என்பதையும் பிரதமரே நேரில் பார்த்துள்ளார். அதனால் கெஜ்ரிவாலுக்கு என்னை அவர் பரிந்துரைத்திருப்பார் என்று கூரறினார் நாகேந்திரா.
டாக்டர் நாகேந்திரா உண்மையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் ஆவார். சேவை செய்யும் நோக்கத்தோடு விவேகானந்த கேந்திராவில் இணைந்தார்.
பின்னர் யோகாவில் ஆர்வம் பிறந்தது. அதுகுறித்து ஆய்வில் இறங்கினார். யோகா தெரப்பியிலும் கை தேர்ந்தவர் டாக்டர் நாகேந்திரா. பல விருதுகளையும் இதற்காக அவர் பெற்றுள்ளார்.