சுவாமிஜியிடம் வெற்றிக்கான மந்திரம் கேட்ட கேஜ்ரிவால்
வாரணாசி: உத்தரபிரதேசமாநிலம் வாரணாசியில் சாமியார் ஒருவரை சந்தித்து ஆசி பெற்ற ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றிக்கான மந்திரத்தை கேட்டுப் பெற்றுள்ளார்.
வாரணாசி தொகுதியில் பாஜகவின் நரேந்திரமோடியை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார். இதனால், நாட்டின் கவனத்தை இந்த தொகுதி ஈர்த்துள்ளது. வரும் 12ம்தேதி இத்தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையொட்டி வாரணாசியில் இன்று கேஜ்ரிவால் தொடர் பேரணிகளை நடத்திவந்தார். காசி பித்யா மடத்தின் சுவாமிஜி அவிமுகேஷ்வரானந்த்தை சந்தித்த கேஜ்ரிவால் வெற்றிக்கான மந்திரத்தை தந்து அருளுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது சாமியார், ருத்ராட்சத்தை எடுத்து கேஜ்ரிவாலிடம் கொடுத்தார்.
இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். கேஜ்ரிவால் வெற்றி பெற்றால் கங்கை நதியை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவ வேண்டும் என்று சுவாமிஜி கேட்டுக்கொண்டாராம். இதை பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்த அவிமுகேஷ்வரானந்த், "கங்கை மீது கேஜ்ரிவால் வைத்துள்ள நம்பிக்கையை பார்த்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது" என்று கூறினார்.