'முதல்வன்' பட பாணியில் மக்களிடம் குறை கேட்கப்போகிறார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி: மக்கள் பிரச்சனைகளை நேரடியாக விவாதிக்கும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கும் நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது.
பிரதமர் மோடி 'மன் கீ பாத்' மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் வனொலியில் உரையாற்றி வருகிறார். மாதம் ஒருமுறை ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் டாக் டூ ஏ.கே என்ற பெயரில் மக்களுடன் நேரடியாக பேசும் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
www.TalkToAK.com இணையதள முகவரி மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிடும் நாளில் கெஜ்ரிவாலுடன் பேச ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்துள்ளது. வரும் 17-ந் தேதி பகல் 11 மணிக்கு பொதுமக்கள் கெஜ்ரிவாலுடன் பேசி குறைகளை எடுத்துக் கூற வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்சியில், சமூக வலைதளங்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாகவும் கேள்விகளை கேட்கலாம்.
இந்த நிகழ்சியில் கெஜ்ரிவால் டெல்லி அரசின் கடந்த ஒன்றரை கால செயல்பாடுகள் குறித்து பேசுவார் என்றும், அதன்பின்னர் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து டெல்லியில் உள்ள மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த நிகழ்சியின் நோக்கம் இந்தியாவில் உள்ள அனைத்து அனைத்து மக்களையும் தொடர்ப்பு கொள்வதே ஆகும். இது பிரதமர் நரேந்திர மோடியின் மன் கீ பாத் நிகழ்சி போல தனியாக பேசும் நிகழ்ச்சி இல்லை. மாறாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் கேள்விகளை அறிந்து கொண்டு, அது குறித்து விவாதிப்பது ஆகும்.
இன்னும் சில நாட்களில் தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும். மேலும், டுவிட்டர், பேஸ்புக், குறுஞ்செய்தி மூலமாகவும் கேள்வி கேட்க ஏற்பாடுகள் செய்யப்படும். இணையதளத்திலும் கேள்விகளை பதிவு செய்யலாம். ஒரே மாதிரியான கேள்விகள் பலதரப்பு மக்களிடம் இருந்து வரும் சமயத்தில், அவை அனைத்தும் ஒரே கேள்வியாக மாற்றப்படும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்த டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.