ரூ.500, ரூ.1000 செல்லாது.. முன்கூட்டியே வேண்டியவர்களுக்கு சொல்லி பாஜக சதி: கெஜ்ரில்வால்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தனது நண்பர்களுக்கு பாஜக முன்கூட்டியே சொல்லிவிட்டது என்று கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பாஜக அரசு அறிவித்தது. இத்திட்டம் குறித்து ஏற்கனவே தங்களது நண்பர்களுக்கு பாஜக தெரிவித்துவிட்டதாகவும், இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் முன்கூட்டியே வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 8ம் தேதி மோடி திடீர் என்று அறிவித்தார். இதனால் சாதாரண மக்கள்தான் பெரும் அவதிக்குள்ளானார்கள். குழந்தைகளுக்கு தேவையான பாலை வாங்கக் கூட முடியாமல் அலைகழிக்கப்பட்டனர். வங்கிகள், அஞ்சலகங்களில் அவர்களுடைய பணத்தை எடுப்பதற்கே அவர்கள் கால் கடுக்க நாள் முழுக்க நின்று வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பு குறித்து கடுமையான குற்றம் சாட்டியுள்ளார். பழைய நோட்டுகள் செல்லாது என்று தங்களது நண்பர்களுக்கு முன்கூட்டியே பாஜக சொல்லிவிட்டது என்றும், ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பில் முறைகேடு நடந்துள்ளது என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மேலும், இப்படி முன்கூட்டியே தெரிவித்துவிட்டதால் பாஜகவை சேர்ந்த பலர், பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டனர் என்றும், 500 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது என்றும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.