பலாத்காரங்களில் ஈடுபடும் சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 15 ஆக குறையுங்கள்: கெஜ்ரிவால்
டெல்லி: பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடும் சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 18ல் இருந்து 15 ஆக குறைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த வாரம் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். அதில் இரண்டரை வயது சிறுமி பலாத்கார வழக்கில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்குவது பற்றி ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சர் மனிஷ் சிசோடியா தலைமையிலான குழு 15 நாட்களுக்குள் தனது அறிக்கையை சமர்பிக்கும்.
பலாத்கார வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க சிறப்பு வழக்கறிஞர்களை மாநில அரசு நியமிக்கும்.
டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிக அளவில் நடக்க காரணமே குற்றவாளிகளுக்கு சட்டம் மீது பயம் இல்லாதது தான். டெல்லியில் தான் அனைத்து கெட்டவர்களும் உள்ளார்கள் என்றும், கொல்கத்தா, நியூயார்க், லண்டன் அல்லது வாரணாசியில் உள்ளவர்கள் எல்லாம் யோகிகள் என்றும் நான் நினைக்கவில்லை.
டெல்லியில் மக்களுக்கு சட்டம் மீது பயம் இல்லை. டெல்லி விரைவு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிதி ஒதுக்கப்படும். டெல்லியின் தலைமை நீதிபதியிடம் உதவி கோரப்படும். நகர நிர்வாகத்தை ஓராண்டாவது மோடி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
டெல்லி பெண்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்காவிட்டால் மோடியை நாங்கள் நிம்மதியாக தூங்கவிட மாட்டோம். நான் ஒன்றும் ஷீலா தீக்சித் இல்லை அமைதியாக இருக்க. பலாத்கார குற்றங்களில் ஈடுபடும் சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 18ல் இருந்து 15 ஆக குறைக்க வேண்டும் என்றார்.