அவதூறு வழக்கால் அச்சம்.. ஜெட்லியிடம் வருத்தம் தெரிவித்த கெஜ்ரிவால்
அவதூறு வழக்குகளில் ஒவ்வொருவரிடமாக மன்னிப்பு கேட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால், அருண் ஜெட்லியிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
டெல்லி: கேப்டன் விஜயகாந்துக்கு பிடிக்காத ஒரு விஷயம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஒவ்வொரு தலைவராக தேடிச்சென்று, அவதூறு வழக்குகளை வாபஸ் பெறும்படி மன்னிப்பு கேட்டு வருகிறார். அவருடைய டைரி இதற்கான அப்பாயின்ட்மென்ட்களால் நிரம்பி வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், மிகவும் தைரியமான, நேர்மையான, ஐஆர்எஸ் அதிகாரி என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறியப்பட்டார். அரசியலில் குதித்து, டெல்லி முதல்வரானப் பிறகுதான், ஒருநாள் முதல்வர் அர்ஜூன் மாதிரி, ஏன் சார் இவங்க இப்படி பண்றாங்க என்று கேட்கத் துவங்கினார்.
ஆனால், சமாளித்து பிரதமர் மோடி முதல் பலருக்கு சரியான சவால் கொடுத்து வந்தார். மிகவும் துடிப்பான அரசியல்வாதியாக அவர் பார்க்கப்பட்டார்.
2018 துவங்குவதற்கு முன் யாரிடம் ஜோசியம் பார்த்தார் என்று தெரியவில்லை. வரிசையாக யார் யாரை எதிர்த்து கருத்து தெரிவித்து அவதூறு வழக்குகளை சந்தித்தாரோ அவர்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார்.
அந்த வரிசையில், ரூ.10 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதை ஜெட்லி ஏற்றுக் கொள்ள, வழக்கை முடித்துக் கொள்வதாக டெல்லி கோர்ட்டில் இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மன்னிப்பு என்னுடைய அகராதியில் பிடிக்காத வார்த்தை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு படத்தில் சொல்வார். ஆனால், அதை தினமும் சொல்லாவிட்டால், கெஜ்ரிவாலுக்கு தூக்கம் வராது.