முறையான கட்டமைப்பை ஏற்படுத்த 10 நாட்கள் தேவைப்படும்: கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் முறையான கட்டமைப்பை ஏற்படுத்த 10 நாட்கள அவகாசம் தேவைப்படும் எனவும், அதன் பின்னர் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப் படும் எனவும் டெல்லி முதல்வராக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நேற்று ராம்லீலா மைதானத்தில் வைத்து நடைபெற்ற விழாவில் முதல்வராக பதவியேற்றார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். மக்கள் பிரச்சினையை தீர்க்க முன்னுரிமை அளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்த நிலையில் முதல் நாளே அவரது வீட்டின் முன் அரசு பஸ் ஊழியர்கள் 1000 பேர் திரண்டனர்.
முதல்வராக பதவி ஏற்ற கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த அவர்கள் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ‘தாம் தற்போதுதான் பதவியேற்றுள்ளதாகவும், முறையான கட்டமைப்பை ஏற்படுத்த இன்னும் 10 நாட்கள் தேவைப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர், டெல்லி மக்களின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். தமது நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.