ராமராஜ்யம் நடக்கவில்லை… அரசு பாதுகாப்பை கேஜ்ரிவால் மறுக்கக் கூடாது: ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்
டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தனக்கு வீடு, கார், போலீஸ் பாதுகாப்பு போன்ற எவ்வித அரசு சலுகைகளும் தேவையில்லை என்று கூறியதாக நேற்று செய்திகள் வெளியாகின.
அவரது இந்த கருத்துக்கு ஆன்மிக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு அளிக்கும் பாதுகாப்பை ஏற்றுக் கொள்ள அரவிந்த் கேஜ்ரிவால் மறுப்பு தெரிவிக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், 'லட்சியத்துக்கும், நடைமுறைக்குமான இடைவெளியில் உள்ள நிலைப்பாட்டை அரவிந்த் கேஜ்ரிவால் தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு மாநிலத்தின் தலைமை ஆட்சியாளர் என்ற முறையில் அரசு வழங்கும் குறைந்தபட்ச பாதுகாப்பையாவது அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் ராம ராஜ்ஜியத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கவில்லை. கிரிமினல்களுக்கு எளிதான இலக்காக நாம் ஆகிவிடக் கூடாது. கடவுள்கள் கூட ஆயுதங்களுடன் தான் உள்ளனர்.
ரிஷிகளும், முனிவர்களும்தான் நிராயுதபாணிகளாக திரிகின்றனர். அரவிந்த் கேஜ்ரிவால் ஒன்றும் சன்னியாசி அல்ல... எனவே, அரசு வழங்கும் பாதுகாப்பை அவர் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும்' என்று கூறியுள்ளார்.