நாட்டுக்கு நல்லது செய்தேன் என நிரூபிப்பேன் ஸ்ரீஸ்ரீ ரவிஜி... டுவிட்டரில் கெஜ்ரிவால் வேதனை
டெல்லி: தன்னைப் பற்றி ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் கூறிய கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ‘தான் நாட்டிற்கு என்ன நன்மைகள் செய்தேன் என ஒரு நாள் நிரூபிப்பேன்' என டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால்.
கடந்த மாதம் குஜராத்தின் வளர்ச்சியை நேரில் காண்பதற்காக 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது அங்கு வளர்ச்சி எதையும் தான் பார்க்கவில்லை என விமர்சித்திருந்தார் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவாலின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தான் கடந்த 1990ம் ஆண்டு மற்றும் 2000ம் ஆண்டுகளில் குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாகவும், மற்ற மாநிலங்களைப் பார்க்கையில் குஜராத்தில் ஊழல் மலிந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மற்ற அரசியல்வாதிகளைப் போல் கெஜ்ரிவாலும் பேசுவதாகவும், அவர் ஆட்சிக்கு வந்தால் நாடு பேராபத்தை அடையும் அபாயம் உள்ளதாகவும் கூறி அவரை கடுமையாக விமர்சித்திருந்தார் ரவிசங்கர்.
இதனால் மனவேதனை அடைந்த கெஜ்ரிவால், தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ‘என்னைப் பற்றிய தங்கள் கருத்துக்களால் நான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளேன் குருஜி. நிச்சயம் ஒருநாள் நான் நாட்டிற்கு என்ன நல்லது செய்தேன் என நிரூபிப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் நாட்டைப் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும், சுயநலமாக எதையும் சிந்திப்பதில்லை என்றும், இன்னமும் ரவிசங்கர் மீது தான் மரியாதை வைத்துள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.