சவூதியில் தவிக்கும் கேரள மாநிலத்தவரை மீட்க இலவச விமானம்
திருவனந்தபுரம்: சவூதி அரேபியாவில் வேலை இழந்து தவிக்கும் கேரள மாநிலத்தவரை தனி விமானத்தில் அழைத்து வர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சவூதி அரேபியாவில் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோவதாக அந்நாட்டு அரசு கருதியது. இதை தொடர்ந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு கடந்த மாதம் நிதாகத் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின் படி அனைத்து நிறுவனங்களிலு்ம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்த இந்தியர்கள் தொடர்ச்சியாக நாடு திரும்பி வருகின்றனர்.
ஏராளமான கேரள மாநிலத்தவரும் திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்சனை பற்றி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உம்மன்சாண்டி, சவூதி அரேபியாவில் நிதாகத் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேரள மாநிலத்தவர் தாயகம் திரும்பி வந்துள்ளனர்.
இவர்களுக்கு பல்வேறு வகையில் மறுவாழ்வு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சவூதி அரேபியாவில் இருந்து திரும்புவர்களை இலவசமாக அழைத்து வர தனி விமானம் அனுப்பப்படும் என்றார்.