திருநங்கைகளுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு.. பாராட்டுகளை வாரிக் குவிக்கும் கேரளா
கேரளாவில் திருநங்கைகளுக்கு கல்லூரி மற்றும் பல்கலை.களில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் திருநங்கைகளுக்கு கல்லூரி மற்றும் பல்கலை.களில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை திருநங்கைகள் சமூகத்தினர் மனமார வரவேற்றுள்ளனர்.
பல காலங்கள் ஆனாலும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதே அவமானமாக அவர்களுக்கு உணர்த்தப்பட்டது. கேலியும், கிண்டலும் உடைகள் தாண்டி அவர்களை கூசச் செய்தது. பெண்ணாக வாழ விரும்பியும் அதனை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல், ஆணின் உடைக்குள் தஞ்சமடைந்தே கிடப்பது அவர்களின் மனங்களை நொறுக்கி கொண்டிருக்கிறது. அதனால் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சமூக சிக்கல்களிலிருந்து அவிழ்த்து விடுபட பல்வேறு காலமாக மிகவும் போராடி வருகின்றனர்.
மிளிரும் திருநங்கைகள்
என்றாலும் பல துறைகளில், பல வடிவங்களில் பல நல்ல மாற்றங்களை அவர்கள் பெரும் சிரமத்திற்கிடையே நிகழ்த்தியும் வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாஷினி இந்தியாவின் முதல் பெண் சப்-இன்ஸ்பெக்டராக சென்னையில் பணியில் சேர்ந்தார், இந்தியாவில் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியாகி சாதனை படைத்தவர் கிரேஸ் பானு. அதேபோல இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கையான புதுச்சேரியை சேர்ந்த சத்யஸ்ரீ ஷர்மிளா வக்கீல் ஆக சமீபத்தில்தான் பொறுப்பேற்றுள்ளார்.
இடஒதுக்கீடு
இதனால் வாழ்க்கைதரம் மட்டுமல்லாமல், அவர்களின் மீதான மரியாதை, அந்தஸ்துக்களும் உயர்ந்தே வருகிறது. அதற்காக திருநங்கைகளுக்கு கை கொடுத்து, அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்ல கேரளா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கேரளா உயர்கல்வித்துறை சார்பில் பல்கலை.,கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டு உரிய ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு
சமூக நீதித்துறை பரிந்துரை செய்ததையடுத்து, கேரள அரசு இந்த அறிவிப்பினை அரசாணையாக வெளியிட்டுள்ளது. பல பிரச்சனைகள் காரணமாக, திருநங்கைகள் தங்களது கல்வியை பாதியிலேயே கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுவதால், அதனை தவிர்க்கவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
திருநங்கைகள் வரவேற்பு
கேரளா அரசின் இந்த அறிவிப்பிற்கு திருநங்கைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருநங்கைகளின் சமூக சிரமங்களை மனதில் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்களிலும் முக்கிய முடிவுகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவது அவர்களின் வாழ்வில் நிச்சயம் ஒளியேற்றும். தங்களுக்கு இந்த சமூகம் வழங்கிய கொடுமையான வாழ்க்கை முறையை உதறி தள்ளி எழுந்து வரும் இவர்களின் சீரிய முயற்சி பல மடமைகளை எரித்து சாம்பலாக்கும்!