கேரளாவில் 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட வங்கதேச பெண்... ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயற்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த பெண், ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மே மாதம் 28ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கோழிக்கோடு போலீசார், வழக்குப்பதிவு செய்து பலாத்காரத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், காப்பகத்தில் தங்கியிருந்த அப்பெண், கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனபோதும் அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கோழிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.