கத்துவா கொடூரத்துக்கு வக்காலத்து... கேரள வங்கி ஊழியர் டிஸ்மிஸ்!
கேரளாவைச் சேர்ந்த வங்கி அதிகாரி விஷ்ணு நந்தகுமார் கத்துவா சம்பவத்தில் சிறுமி கொல்லப்பட்டது சரிதான் என்று கருத்து போட்டதால் மக்களின் எதிர்ப்பையடுத்து வங்கிப் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
Recommended Video
கொச்சி : கத்துவாவில் 8 வயது காஷ்மீர் சிறுமி கொல்லப்பட்டது சரிதான் என்று முகநூலில் கருத்து போட்ட கேரள இளைஞர் விஷ்ணு நந்தகுமார் வங்கிப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விஷ்ணுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அவரை பணி நீக்கம் செய்ய கோரியதையடுத்து அவரின் வங்கிப் பணி பறிபோயுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி கயவர்கள் சிலரால் அடைத்து வைக்கப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். நாடே காஷ்மீர் சிறுமிக்காக கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறுமியின் கொலை நியாயமானது தான் என்று கீழ்த்தரமான கருத்தை கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு நந்தகுமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் கோடக் மஹிந்திரா வங்கியின் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் விஷ்ணு நந்தகுமார். முகநூலில் இவர் பதிவிட்டிருந்த கருத்தில் "நல்ல வேளையாக இந்தச் சிறுமி 8 வயதிலேயே கொல்லப்பட்டுவிட்டார், இல்லையென்றால் இவள் வளர்ந்து இந்தியா மீது வெடிகுண்டு வீசுவார் என்று விஷ்ணு குறிப்பிட்டுள்ளார்.
விஷ்ணுவிற்கு எதிர்ப்பு
இந்த கருத்து எப்போது பதிவிடப்பட்டது என்று தெரியவில்லை. எனினும் இந்தப் பதிவு பரவலாக பகிரப்பட்டதோடு வங்கியின் முகநூல் ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு நந்தகுமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். ட்விட்டரிலும் உங்கள் வங்கிமேலாளரை(#Dismiss_your_manager) பணிநீக்கம் செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டானது.
ஏற்கனவே பணி நீக்கம்
இதனையடுத்து நேற்று மாலை கோடக் மஹிந்திரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் "விஷ்ணு நந்தகுமாரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை ஏப்ரல் 11, 2018ம் தேதியே பணிநீக்கம் செய்து விட்டோம். எங்கள் வங்கியின் முன்னாள் ஊழியர் இது போன்றதொரு மோசமான கருத்தை பதிவிடுவது எங்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. விஷ்ணு நந்தகுமாருக்கு எங்களின் கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறோம் என்றும் வங்கி குறிப்பிட்டுள்ளது.
வெறுப்பை உமிழும் கருத்து
காஷ்மீர் சிறுமிக்கு நேர்ந்த அவலத்திற்கு நாடே நீதி கேட்டு போராடி வருகிறது. சிறுமியை சித்ரவதை செய்தவர்களை காப்பாற்ற பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருவது மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு நந்தகுமாரின் கருத்து வெறுப்பை அள்ளி வீசுவதாக அமைந்துள்ளது.
நியாயப்படுத்துவது சரியா?
விஷ்ணு நந்தகுமார் உள்ளூர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக குடும்பத்தை சேர்ந்தவர் என்று என்டிடிவி குறிப்பிடுகிறது. எந்த குடும்ப பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும் சிறுமி கொலையை நியாயப்படுத்தும் இவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது. 8 வயதில் ஒரு சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டதற்கு அவள் வளர்ந்து தீவிரவாதியாகிவிடக் கூடாது என்பதை காரணமாகச் சொல்லும் இவரின் மனநிலையை எப்படி எடுத்துக்கொள்வது?