கேரளாவின் புகழ் பெற்ற வாழைத் திருவிழா... 150 ரகங்களுடன் கண்காட்சி கோலாகலம்!
தேசிய வாழை திருவிழாவை ஒட்டி திருவனந்தபுரத்தில் சுமார் பல விதமான வாழைப்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய வாழைத் திருவிழாவில் 150க்கும் அதிகமான வாழைப்பழ வகைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தவரின் பிரதான உணவுகளில் ஒன்று வாழை. இதனால் அம்மாநிலத்தில் பல வகையான வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த சாகுபடியை ஊக்குவிக்கவும், வாழை குறித்து தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், ஆண்டுதோறும் கேரளாவில் புகழ் பெற்ற வாழைப்பழத் திருவிழா நடைபெற்று வருகிறது.
துவக்கவிழா:
திருவனந்தபுரம் அருகே உள்ள கிள்ளியூர் கிராமத்தில் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா கடந்தவாரம் தொடங்கப்பட்டது. மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் இந்தத் திருவிழாவைத் துவக்கி வைத்தார்.
கண்காட்சி:
இந்த விழாவில் சுமார் 150க்கும் அதிகமான வாழைப்பழ ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகள் மற்றும் பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
மக்கள் பார்வைக்கு:
இந்தக் கண்காட்சியில் கேரளாவில் விளைவிக்கப்பட்ட வாழை ரகங்கள் மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் விளைவிக்கப்பட்ட வாழைகளும், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் விளைவிக்கப்பட்ட வாழை ரகங்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மக்கள் மகிழ்ச்சி:
அதோடு வாழைப்பழம், வாழைத் தண்டு மற்றும் அதன் அனைத்து பாகங்களாலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் விற்பனை செய்யப்பட்டன. மக்கள் அவற்றை வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர்.
நடவடிக்கை தேவை:
"இந்தியாவில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் வாழைப்பழம் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால், விளைவிக்கப்படும் வாழைகளில் சுமார் 25 முதல் 40 சதவீதம் வரை சரியான சேமிப்புக் கிடங்குகள் இல்லாத காரணத்தால் வீணாகின்றன. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இத்திருவிழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.