கேரள முதல்வர் பினராயி விஜயனை வடகொரிய அதிபரோடு ஒப்பிட்டு சாடும் காங்., பாஜக!
கேரள முதல்வர் பினராயி விஜயனை வடகொரிய அதிபர் போல செயல்படுகிறார் என்று விமர்சனம் வைக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம் : வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் போலவே கேரள முதல்வர் பினராயி விஜயன் நடந்துகொள்கிறார் என பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து உள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாடுகள் வடகொரிய் அதிபர் கிம் ஜோங் உன்னைப் போல சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், 'தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை இந்த அரசு கடுமையாக தாக்குகிறது. மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயனை பார்ப்பதற்கும், செய்கைகளிலும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைப் போலவே நடந்துகொள்கிறார்' எனக் கூறி உள்ளார்.
அதேபோல நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், சர்வதிகாரத்தனமான செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் பினராயி விஜயன் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் போலவே செயல்பட்டு வருகிறார்.
தனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே அவர் செய்கிறார். மக்களைப் பற்றி எந்த விதத்திலும் அவர் கவலைப்படுவதில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார். ஆட்சியை விட கட்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார். அவரது செயல்பாடுகளால் கேரளா அரசு கடும் இன்னல்களை சந்தித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் தான் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் அமெரிக்க எதிர்ப்பு செயல்பாடுகளை பாராட்டி இருந்தார் பினராயி விஜயன். இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இவ்வாறு பேசி இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.