ஓணம் கொண்டாடுங்கள்.. வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவுங்கள்.. பினராயி விஜயன் வாழ்த்து
ஓணம் பண்டிகையை கொண்டாடுங்கள் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம் : கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று முதலமைச்சர் விடுத்துள்ளார்.
பிரளயம் என பெருக்கெடுத்து வந்த வெள்ளம் மாநலித்தை புரட்டி போட்டது. 380-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கி மாயமானதாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர கட்டிடங்கள், வீடுகள், என அனைத்துமே தரைமட்டமானது. மரங்களும், மின்கம்பங்களும் சாலைகளில் அடியோடு சாய்ந்தன. மிதந்து கிடந்த பல விலங்குகள் காப்பாற்றப்பட்டாலும், ஏராளமான விலங்குகள் செத்து மிதந்தன.
நீண்ட ஆதரவு கரம்
வெள்ளத்தினால் மாநிலமே தவித்து தத்தளித்தபோது, உதவி செய்ய வாருங்கள் என பினராயி விஜயனின் ஒரு குரலுக்கு உலக மக்கள் கட்டுப்பட்டு தங்களால் முடிந்ததை, இயன்றதை அளித்து உதவ வந்தார்கள். கேரள மக்களை தங்கள் உடன்பிறப்புகளாய் நினைத்த உலகின் கடைகோடி மக்களும் ஆதரவு கரம் நீட்டினார்கள். இந்நிலையில்தான், அதாவது கடந்த வாரம் முதல்வர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்த வருடம் ரத்து
வெள்ளப்பெருக்கு காரணமாக கேரள மாநிலத்தின் பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாவும், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு செலவிடும் தொகையை வெள்ள நிவாரண பணிகளுக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு அனைத்து தரப்பிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது.
சாதனை படைப்போம்
வந்து சேர்ந்த நிதியுதவிகள், பல கட்ட மீட்பு பணிகள் அரங்கேறியதன் பின்னர், தற்போதுதான் அம்மாநிலம் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பினராயி விஜயன் மீண்டும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி ஓணம் கொண்டாட வேண்டும் என்று அவர் தம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்து மீண்டு வந்ததை போல, மறுகட்டமைப்பிலும் சாதனை படைப்போம் என்றும் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.
மகாபலி சக்ரவர்த்தி வருவார்
ஒட்டுமொத்த சோகத்திலும் இழையோடியுள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை எப்படி கொண்டாட போகிறார்களோ தெரியாது. ஆனால் போராட்ட குணமும், உறுதியான பிடிப்பும் உள்ள கேரள மக்கள் விரைவிலேயே இந்த இக்கட்டான நெருக்கடியில் இருந்து தங்களை விடுவித்து கொள்வதுடன், மகாபலி சக்கரவர்த்தியை எதிர்கொண்டு வரவேற்பார்கள் என நம்பலாம்.