கேரளா உள்ளாட்சித் தேர்தல்: காங். அணிக்கு பின்னடைவு- இடதுசாரிகள் வெற்றி- ஷாக் கொடுத்த பா.ஜ.க.!!
திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளின் முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பாரதிய ஜனதாவும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணியின் பிரதான கட்சிகளாக களம் கண்டன. 3வது அணியாக ஈழவா சமூகத்தின் எஸ்.என்.டி.பி இயக்கத்துடன் பாரதிய ஜனதா கட்சி கைகோர்த்து களம் இறங்கியது.
2 கட்டங்களாக நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது.
மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் திரிசூர், கோழிக்கோடு, கொல்லம் ஆகியவற்றை இடதுசாரிகள் முன்னணி கைப்பற்றியுள்ளது.
கொச்சி மாநகராட்சியை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
கண்ணூர், திருவனந்தபுரம் மாநகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இடதுசாரிகள் 42; பாரதிய ஜனதா கட்சி 34 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ் கட்சி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு 21 வார்டுகளில் தான் வென்றுள்ளது.
மாநகராட்சிகளில் கோழிக்கோட்டில் 7, திரிசூரில் 6, கொல்லம், கொச்சியில் தலா 2 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி வென்றுள்ளது.
86 நகராட்சிகளில் இடதுசாரிகள் கூட்டணி 44, காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களையும் பாரதிய ஜனதா கட்சி பாலக்காடு நகராட்சியையும் கைப்பற்றியுள்ளது.
14 மாவட்ட பஞ்சாயத்துகளில் இடதுசாரிகளும் காங்கிரஸ் கூட்டணியும் தலா 7 இடங்களை கைப்பற்றியுள்ளன.
152 ஊராட்சி ஒன்றியங்களில் இடதுசாரிகள் கூட்டணி 89; காங்கிரஸ் கூட்டணி 62 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
941 கிராம பஞ்சாயத்துகளில் இடதுசாரிகள் அணி 551; காங்கிரஸ் கூட்டணி 361; பாரதிய ஜனதா கட்சி 12 இடங்களிலும் வென்றுள்ளன.
மலப்புரம், ஆழப்புழாவில் 2 வார்டுகளை பா.ஜ.க. கைப்பற்றி கணக்கைத் தொடங்கியுள்ளது.
மூணாறு தேவிகுளம் பஞ்சாயத்தில் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்திய தமிழ் பெண்கள் போராட்ட குழுவின் தலைவர் கோமதி வெற்றி பெற்றுள்ளார்.