பினராயி விஜயனுக்கு ‘கேரள பெரியார்’ விருது வழங்கிய தமிழக அமைப்பு!
பினராயி விஜயனுக்கு தமிழ்ப் புலிகள் கட்சியினர் ‘கேரள பெரியார்’ விருதினை வழங்கினர்.
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்ப்புலிகள் கட்சியினர் 'கேரள பெரியார்' என்கிற விருதை நேற்று வழங்கினர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் 6 தலித் அர்ச்சகர்களை நியமித்தது கேரளா அரசு. சமூகநீதிக்கான முன்னெடுப்பில் பெரிய பாய்ச்சலாக இது பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பினால் கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள் குவிந்தது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற வாதத்தை முதலில் முன்வைத்தவர் தந்தைப் பெரியார். அவரது கொள்கையை ஏற்று அரசாணையை 1970ம் ஆண்டு வெளியிட்டவர் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி. ஆனால், வழக்குகளில் விளைவாகத் தமிழகத்தில் இன்னும் அதைச் செய்யமுடியவில்லை.
இந்த சமயத்தில் கேரளாவில் தலித் இளைஞர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகிறது. பெரியாரின் கனவை நிறைவேற்றியதற்காக, தமிழ்ப்புலிகள் கட்சியினர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு விருது வழங்க முடிவு செய்தனர்.
நேற்று இரவு பினராயி விஜயனைச் சந்தித்த தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், அவருக்கு 'கேரள பெரியார்' என்கிற விருதினை வழங்கி கெளரவித்தார்.