முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக அனுமதிக்க முடியாது முடியாது: பினராயி விஜயன்
டெல்லி: முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க முடியாது என டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியார் அணை விவகாரம் மீண்டும் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதாக கேரளா முதல்வர் உம்மன் சாண்டி சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். இதனையடுத்து பற்றிக்கொண்டது பரபரப்பு.
இதனிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இந்த நிலையில் கேரள முதல்வரை கண்டித்து இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறில், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவது, புதிய ஒப்பந்தம், கேரளத்துக்கு பாதுகாப்பு மற்றும் அணை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதை கேரள நீர்பாசனத் துறை முன்னாள் அமைச்சர் பி.ஜே.ஜோசப் தொடங்கி வைத்தார். மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பேசினார்.
அப்போது அவர், கேரளத்தின் புதிய முதல்வர் பினராயி விஜயன், பெரியாறு அணை பலமாக உள்ளதாகவும், புதிய அணை தேவை இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரோ, பிரதமரைச் சந்தித்து அணையின் நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்த கோரிக்கை வைக்கிறார். அவருக்கு உதவும் வகையில்தான் பினராயி விஜயனின் கருத்தும் உள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க முடியாது என டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு தமிழக அரசு கோருவதை ஏற்க இயலாது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தேவைபட்டால் மீண்டும் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தாக்கல் செய்யும் என அவர் பேட்டியளித்தார்.
மேலும் புதிய அணை அமைப்பது தொடர்பாக சர்வதேச குழு ஒன்று அமைக்க கேரள அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகமும், மத்திய அரசும் அனுமதிக்கும் வகையில் குழுவை அமைக்க கேரள அரசு முயற்சி எடுத்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.