பாலக்காடு ரயில் பெட்டி தொழிற்சாலையை கைவிடுவதா? டெல்லியில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் போராட்டம்
டெல்லியில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் நடத்தினார்.
டெல்லி: பாலக்காடு ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை ஹரியானா, உத்தரப்பிரதேசத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
பாலக்காட்டில் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தற்போது இந்த தொழிற்சாலை ஹரியானா அல்லது உத்தரப்பிரதேசத்துக்கு மாற்றப்பட இருக்கிறது.
இது கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ரயில்வே பவன் முன்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கேரளாவில் இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெறுவதாலேயே மத்திய அரசு துரோகம் செய்வதாக பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி எம்.பி.க்களும் பங்கேற்றனர்.
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் 1 வாரம் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியிருந்தார். இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் போராட்டம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.