‘எண்டே பிரியமான மக்களே’.. பேஸ்புக் மூலம் வாக்காளர்களுடன் நேரடியாகப் பேசிய கேரள முதல்வர்
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல் டிஜிட்டல் மாநிலம் என்ற பெருமைக்குரிய கேரளாவில், பேஸ்புக் வாயிலாக மக்களுடன் நேரடியாக உரையாடியுள்ளார் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி.
சமூகவலைதளங்கள் மூலமாக சமீபகாலமாக திரையுலகப் பிரபலங்கள் நேரடியாக ரசிகர்களுடன் பேசுவது அதிகரித்துள்ளது. இதன்மூலம், கால் கடுக்க பிரபலங்கள் வாசலில் நின்று, நாம் ஹாய் என கையசைப்பதைக்கூட அவர்கள் கவனித்தார்களா என்ற கவலை ரசிகர்களுக்கு காணாமல் போய்விட்டது. அதேபோல், ரசிகர்களும் தாங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை இது போன்ற சமூகவலைதளங்கள் மூலம் கேட்கிறார்கள்.
இந்நிலையில், பொதுமக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஒருவர் பேஸ்புக்கில் பதிலளித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. அதிலும், இது நடந்தது வேறு எங்கோ இல்லை, நமது அண்டை மாநிலமான கேரளாவில் தான்.
செல்போன் இணைப்பு...
கல்வியறிவில் சிறந்து விளங்கும் கேரளாவில் அனைத்து பகுதிகளிலும் செல்போன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பெரும்பாலான அரசு சேவைகளை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பெற முடியும்.
முதல் டிஜிட்டல் மாநிலம்...
இதேபோல், அனைத்து பஞ்சாயத்துக்களிலும் பிராட்பேன்ட் இன்டர்நெட் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே முதல் டிஜிட்டல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்றுள்ளது.
உம்மன்சாண்டி...
டிஜிட்டல் மாநிலம் என பேர் பெற்றபோதும், சமீபத்தில் தான் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி சொந்தமாக செல்போன் பயன்படுத்தத் தொடங்கியுள்ளாராம். தேபோல் பேஸ்புக்கிலும் சமீபத்தில்தான் இணைந்தார்.
லைவ் சாட்டிங்...
பேஸ்புக்கில் பிரவேசித்ததும் வாக்காளர்களுடன் நேற்று நேரடியாக உரையாடினார் உம்மன்சாண்டி. நேற்றிரவு 9 மணியளவில் சுமார் 30 நிமிடங்கள் பேஸ்புக் மூலம் வாக்காளர்களாகிய பொதுமக்களுடன் அவர் நேரடியாக உரையாற்றியுள்ளார்
முதல் முதல்வர்...
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் பேஸ்புக் மூலம் வாக்காளர்களுடன் பேசும் வாய்ப்பினை பயன்படுத்திய முதல் முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கேள்விக்கணைகள்...
உம்மன்சாண்டியுடனான இந்த உரையாடலில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு கேள்விகளைத் தொடுத்தனர். அவற்றிற்கு உம்மன்சாண்டி பதில் அளித்தார்.
பேஸ்புக்கின் பயன்...
தனது இந்த உரையாடல் குறித்து உம்மன்சாண்டி கூறுகையில், ‘வாக்காளர்களுடன் உரையாடவும், அவர்களுடன் விவாதிக்கவும், விவாதங்களை நடத்தவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த பேஸ்புக் தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.