மாணவிகள் பக்கத்தில் உட்கார்ந்ததால் மாணவர் சஸ்பெண்ட் - சர்ச்சையில் சிக்கிய கேரள கல்லூரி
கோழிக்கோடு: கேரளாவில் உள்ள பிரபல கல்லூரியில் மாணவிகளின் அருகே மாணவர் ஒருவர் அமர்ந்ததால் கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ளது இந்த பிரபல தனியார் கல்லூரி. இந்த கல்லூரியில் பி.ஏ.படிக்கும் மாணவர் டினு, இவருடன் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த 29 ஆம் தேதி டினுவின் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் மாணவிகளுக்கு அருகே அமர்வது என்று முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து அன்று காலை வகுப்பு தொடங்கியது. அப்போது மாணவர்கள் அனைவரும் மாணவிகள் அருகே அமர்ந்து இருந்தனர். இதனை பார்த்த கல்லூரி பேராசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.உடனே கல்லூரி நிர்வாகித்தனர் டினு மற்றும் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளை எச்சரித்தனர். மேலும் கல்லூரியில் இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் மட்டுமே வகுப்புக்கு அனுமதிப்போம் என்றும் கூறினர்.
மாணவ-மாணவிகள் 10 பேர் நிர்வாகத்திடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர். கடிதம் கொடுத்த மாணவ மாணவிகள் மட்டும் வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மாணவர் டினு, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க மறுத்துவிட்டார் .படிக்கும் இடத்தில் சேர்ந்து இருப்பதை நான் தவறாக நினைக்கவில்லை. எனவே மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்கமாட்டேன் என்று கல்லூரி நிர்வாகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. இந்த தகவல் வெளியே கசிந்ததை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.