மிஸ்டர் சசி தரூர்... ஓவர் "மோடி" ஜால்ரா உடம்புக்கு நல்லதில்ல - குட்டு வைக்கும் காங்கிரஸ்
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி எது செய்தாலும் அதை பாராட்டுவதற்கு என்று காங்கிரஸில் ஒரு கோஷ்டி உருவெடுத்துள்ளது. இதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கு காங்கிரஸில் எதிர்ப்பு வலுத்துள்ளது.
பிரதமர் மோடி புதிய திட்டங்களை அறிவிக்கும் போதும் சரி... முக்கிய உரைகள் நிகழ்த்தினாலும் சரி.. அதை ஆஹா ஓஹோவென புகழ்வதற்கென காங்கிரஸ் தலைவர்கள் போட்டி போட்டி ட்விட்டரில் காத்துக்கிடக்கிறார்கள். இவர்களில் சசி தரூர் மிக முக்கியமானவர்.
ஆனால் தமது நிலைப்பாடு பாஜகவுக்கு ஆதரவானது அல்ல; இந்திய அரசுக்கு ஆதரவானது என்று ஒரு சப்பைக் கட்டு காரணத்தையும் ட்விட்டரில் போட்டுக் கொண்டிருப்பவர் சசி தரூர். தற்போது இவருக்கு கேரளா மாநில காங்கிரஸில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து கேரளா காங்கிரஸ் மூத்த தலைவரான எம்.எம். ஹாசன் கூறுகையில், மோடியை ஓவராக புகழ்வதை சசி தரூர் நிறுத்த வேண்டும். சசி தரூரின் இந்த புகழார செயல்பாடுகள் குறித்து மாநில காங்கிரஸ் ஆராய்கிறது என்று கூறியுள்ளார்.
இதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யரும், பிரதமர் மோடி தம்மை அழைத்தார் என்பதை சசி தரூர் பெருமையாக கருதலாம்.. ஆனால் நானோ மோடி என்னை அழைக்காததே எனக்கு கவுரவம் என கருதுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படி சசி தரூருக்கு எதிராக காங்கிரஸில் பஞ்சாயத்து குரல் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.