கொடூர பலாத்காரத்துக்குள்ளாகி கொலையான தலித் மாணவி.. கேரளாவில் கொந்தளிப்பு!
கொச்சி: கேரளாவில் 30 வயது தலித் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் குரல்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாவூரை சேர்ந்த ஜிஷா(30) என்ற தலித் சமூகத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குடலை உருவி கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 30 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது.
இந்த சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2 பேர்
ஜிஷா கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை பிடித்துள்ளனர். ஆனால் அவர்கள் தான் ஜிஷாவை கொலை செய்தார்களா என்பது தெரியவில்லை. விசாரணை குறித்த தகவல்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
உம்மன் சாண்டி
ஜிஷாவின் கொலை குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
வழக்கு
ஜிஷா கொலையை கண்டித்து மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மாநிலம் முழவதும் கண்டன பேரணி நடத்தினர். இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான கேரள மாநில ஆணையம் தானாக முன்வந்து ஜிஷா விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
மனித உரிமை ஆணையம்
மீடியாக்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் கேரள மாநில மனித உரிமை ஆணையமும் தானாக முன் வந்து ஜிஷா கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் ஜிஷா வழக்கு விசாரணையை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்குமாறும் அது வலியுறுத்தியுள்ளது.