சபரிமலைக்குள் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும்...கேரள அரசு நிலைப்பாட்டில் உறுதி!
சபரிமலைக்குள் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் : சபரிமலைக்குள் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் தேவைப்பட்டால் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க தடை உள்ளது. இந்தத் தடையை நீக்கி அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம்,5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு கேரள அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. கோவிலுக்குள் செல்வதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்று தேவஸ்வம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
2007 மற்றும் 2008 காலகட்டத்தில் இடதுசாரி அரசு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது.
தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் ஆவணங்களையும் தாக்கல் செய்யத் தயாராக உள்ளோம் என்றார் அவர். 2016ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.