கேரளாவில் இளம் டாக்டர் தற்கொலை - மரணத்திற்கு முன் சாரி என்று எழுதிய காரணம் என்ன
கேரளாவில் ஒரு இளம் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வியாழக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லம்: கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 35 வயதான இளம் ஆர்த்ரோ டாக்டர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். தனது மரணத்திற்கு முன்பு அவர் பாத்ரூமில் சாரி என்று எழுதி வைத்து விட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். மருத்துவரின் மரணத்திற்கான காரணம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட டாக்டரின் பெயர் அனூப் கிருஷ்ணா என்பதாகும். 35 வயதான இவர் கிலிகொல்லூரில் அனூப் ஆர்த்தோ கேர் மருத்துவமனையை நடத்தி வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடப்பகடாவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார்.
அவரது உடலை கைப்பற்றிய கிலிகொல்லூர் போலீசார் இயற்கைக்கு மாறான மரண வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் 23 ஆம் தேதி, டாக்டர் அனூப் நடத்தும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஏழு வயது சிறுமி, டாக்டர் அனூப் தலைமையிலான முழங்கால் அறுவை சிகிச்சையின் போது இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த மரணத்திற்கு காரணம் அனூப்தான் என்று சமூக ஊடகங்களில் பலரும் குற்றம் சாட்டினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் டாக்டர் அனூப் கிருஷ்ணா. இந்த நிலையில் தனது வீட்டின் குளியலறையில் சாரி என்று எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த மரணம் பற்றி விசாரணை நடத்தும் காவல்துறையினர் குழந்தையின் மரணத்திற்கும் டாக்டரின் தற்கொலைக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். டாக்டரை யாராவது மிரட்டி தற்கொலைக்கு தூண்டினார்களா என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.