கேரளாவில் காதலனைக் காணச் சென்ற பெண், உறவினர் பலாத்காரம்- 8 பேர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் காதலனை சந்திப்பதற்காகச் சென்ற இளம்பெண்ணும், அவரது உறவுக்காரப் பெண்ணும் காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வர்கலை பகுதியைச் சேர்ந்த நிஷாத், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்திருப்பதாகக் கூறிய நிஷாத், அதற்கு முன்னதாக மனம் விட்டுப் பேச வேண்டும் என தன் காதலியை அழைத்துள்ளார்.
நிஷாத்தின் பேச்சை உண்மையென நம்பிய அப்பெண், தனது உறவினரான 24 வயது பெண் ஒருவரையும் அழைத்துக் கொண்டு நிஷாத் குறிப்பிட்டு சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தயாராக இருந்த ஆட்டோவில் காதலி மற்றும் அவரது உறவுக்காரப் பெண்ணை அழைத்துச் சென்ற நிஷாத், குளமுட்டம் என்ற கடற்கரை கிராமத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே, நிஷாத்துடன் அவரது நண்பர்களான மிதுன் (வயது 20), பன்சில் (18), சமில் (36), அகமது (20), சபீக் (24), ஆஷிக் (25), இப்ராகிம் (23), சஜிர் (24) ஆகியோர் சேர்ந்து இளம்பெண்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சுமார் ஒரு வாரமாக அந்த வீட்டில் அடைத்து வைத்து இரண்டு பெண்களையும் அவர்கள் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நிஷாத் வெளியில் சென்றிருந்த நேரத்தில் மற்ற நண்பர்களும் மது போதையில் இருந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பெண்கள், அங்கிருந்து தப்பி வர்கலை போலீஸ் நிலையம் வந்தனர். அங்கு தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறி அவர்கள் கதறி அழுதுள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஆற்றிங்கல் போலீஸ் டி.எஸ்.பி. தலைமையிலான குழு, அங்கு மது போதையில் கிடந்த 8 வாலிபர்களையும் கைது செய்தனர். வெளியில் சென்றிருந்த நிஷாத் மட்டும் போலீஸ் வலையில் சிக்கவில்லை. தலைமறைவான நிஷாத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட 2 பெண்களும் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதல்கட்ட விசாரணையில் தலைமறைவாக உள்ள நிஷாத் இதற்கு முன்னர் இது போன்று மேலும் பல பெண்களை வீழ்த்தி பலாத்காரம் செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.