பாஜகவுக்குத் தாவினார்.. மோடியைப் பாராட்டிப் பேசிய காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ அப்துல்லா குட்டி!
கண்ணூர்: பிரதமர் மோடியைப் புகழ்ந்த கேரள காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அப்துல்லா குட்டி இப்போது பாஜகவில் இணையவுள்ளார்.
கேரளாவின் கண்ணூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி. 52 வயதான இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்ணூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தற்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் அப்துல்லா குட்டி கடந்த மாதம் 28-ம்தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காந்தியவாதி என்ற தலைப்பில் பிரதமர் மோடி தலைமையில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளைப் பாராட்டி எழுதியிருந்தார்.
அந்தப் பதிவில் சமூக சேவகர்கள் ஒரு கொள்கையை உருவாக்கும்போது, அவர்கள் சந்தித்த ஏழை மக்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அதைச் சரியாகச் செய்துகாட்டியவர் மோடி என்று எழுதியிருந்தார். இது கேரளாவில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
கேரள காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்த இந்த பதிவு குறித்து செய்தியாளர்களிடம் அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, பிரதமர் மோடி காந்திய கொள்கைகளை பின்பற்றுவதாக அப்துல்லா குட்டி கூறியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. அவரிடம் விளக்கம் கோரப்படும். உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அப்துல்லா குட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், சரியான விளக்கம் அளிக்காததால், அப்துல்லா குட்டி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டதும் அப்துல்லா உடனடியாக டெல்லிக்கு நேற்று சென்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா இருவரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர்கள் அப்துல்லா குட்டியை பாஜகவில் இணையுமாறு கோரினர்.
பிரதமர் மற்றும் அமித்ஷாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்துல்லா, சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார். பிரதமர் மோடியைப் புகழ்ந்தமைக்காக நான் முதலில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தபோது நடவடிக்கையைச் சந்தித்ததையும், இப்போது காங்கிரஸ் கட்சியும் நடவடிக்கை எடுத்ததையும் கேட்டு பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். பாஜகவில் சேர்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. மரியாதை நிமித்தமாகவே இந்தச் சந்திப்பு இருந்தது என அப்துல்லா குட்டி தெரிவித்தார்