கேரளாவிலும் பரவியது தமிழக விவசாயிகளின் மண்டை ஓடு, அரை நிர்வாண போராட்டம்!!
தமிழக விவசாயிகளை போல அரை நிர்வாணம், மண்டை ஓட்டுடன் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
பாலக்காடு: தமிழக விவசாயிகளை போல அரை நிர்வாணம், மண்டை ஓட்டுடன் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது.
40 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் நடத்திய விதவிதமான போராட்டத்துக்கு மற்ற மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மண்டை ஓடு போராட்டம்
தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போன்று கேரள மாநிலம் பாலக்காடு நகரில் இன்று காலை பாலக்காடு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் இடுப்பில் பச்சை துண்டு கட்டி கழுத்தில் மண்டை ஓட்டை மாட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் வேதனை
அப்போது பேசிய விவசாயிகள் கடந்த 2 வருடமாக இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதாக தெரிவித்தனர், இதனால் விவசாய பயிர்கள் கருகி அழிந்து விட்டது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
கடனை தள்ளுபடி செய்க
எனவே விவசாயத்திற்காக வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆழியாற்றில் இருந்து சித்தூர் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மண்டை ஓட்டுடன் ஊர்வலம்
கோரிக்கை குறித்து கோஷம் எழுப்பியவாறு பாலக்காடு நகர் முழுவதும் விவசாயிகள் கழுத்தில் மண்டை ஓட்டை மாட்டியவாறு ஊர்வலமாக சென்றனர். தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போன்கேரள விவசாயிகளும் போராட்டம் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.