கேரளாவில் மீன் விற்றதில் இருந்து சினிமா வாய்ப்பு வரை.. மாணவி ஹமித் ஹனன் வாழ்வை மாற்றிய ஒரு கட்டுரை!
கேரளா மாணவி ஹமித் ஹனனை, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேரில் அழைத்து சந்தித்து இருக்கிறார்.
Recommended Video
எர்ணாகுளம்: கேரளாவில் மீன் விற்கும் மாணவி ஹமித் ஹனனை, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேரில் அழைத்து சந்தித்து இருக்கிறார்.
நேற்று அவரது அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்து இருக்கிறது. கேரளா அரசு அவருக்கு தேவையான உதவி எல்லாவற்றையும் செய்யும் என்று அவர் பேட்டியளித்தார்.
அதேபோல் ஹமித் ஹனனின் விடா முயற்சியை பாராட்டுவதாகவும் கூறியுள்ளார். தற்போது மீன் விற்கும் மாணவி ஹமித் ஹனன் இந்தியா முழுக்க பிரபலம் ஆகியுள்ளார்.
யார் இவர்
ஹமித் ஹனன், எர்ணாகுளத்தில் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி படித்து வருகிறார். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய படிப்பு தேவைக்காக காலையிலும் மாலையில் கல்லூரிக்கு நேரத்திற்கு முன்னும் பின்னும் மீன் விற்கிறார். இவரை குறித்து மலையாள நாளிதழான மாத்ரூபூமி கட்டுரை வெளியிட்டது. அவரது கஷ்டங்களை பேட்டியாக வெளியிட்டது. அந்த ஒரு கட்டுரைதான் அவரது மொத்த வாழ்க்கையை மாற்றியுள்ளது.
பெரிய பாராட்டு
இந்த கட்டுரைக்கு இந்தியா முழுக்க இருந்து பாராட்டு குவிந்தது. கேரளா எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அவரது பேட்டி கட்டுரையை படித்து பாராட்டி தள்ளினார்கள். இப்படி ஒரு விடா முயற்சி செய்யும் மாணவியா என்று பாராட்டினார்கள். கேரளா மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் அவர் பிரபலமானார்.
பிரச்சனை ஆனது
ஆனால் அவர் நடிக்கிறார், அவர் ஏழை கிடையாது என்று சிலர் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தனர். அதோடு அவர் தங்க மோதிரம் போட்டு இருக்கிறார். அவர் சொல்வது எல்லாம் பொய் என்று சிலர் கூறினார்கள். சிலர் இதற்காக லைவ் வீடியோ கூட வெளியிட்டனர். ஆனால் இதில் இரண்டு பேர் பிற்பாடு கைது செய்யப்பட்டார்கள்.
கண்டிப்பு
இந்த பிரச்சனை பெரிதானதை அடுத்து, மத்திய அமைச்சரான அல்போன்ஸ் கண்ணன்தானம், இதுகுறித்து போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த 21 வயது மாணவி குறித்து யாரும் தவறாக எழுத கூடாது. அப்படி எழுதினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே அந்த மாணவி கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார், அவரை இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்றுள்ளார்.
விளக்கம் கொடுத்தார்
இதையடுத்து மனமுடைந்த நிலையில் ஹனன், சமூக வலைதளத்தில் கோரிக்கை ஒன்றை வைத்தார். தன்னுடைய மோதிரத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து வாங்கினேன் என்று விளக்கம் கொடுத்தார். அதோடு தன்னை நிம்மதியாக வாழவிடுங்கள் என்றும் கோரிக்கை வைத்து கண்ணீர் விடுத்து இருந்தார்.
சந்தித்து பாராட்டு
இந்தநிலையில்தான் நேற்று அம்மாநில முதல்வர், பினராயி விஜயன் அவரை நேரில் சந்தித்துள்ளார். அதோடு அவருக்கு தேவையான உதவிகள் செய்வதாக கூறியுள்ளார். மேலும் இயக்குனர் அருண் கோபி, மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கும் படத்தில் ஹனனுக்கு வாய்ப்பு அளிக்க இருக்கிறார். மாத்ரூபூமியில் வெளியான ஒரு கட்டுரை அந்த பெண்ணின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது.